ரபேல் ஆவணங்களை திருடிவிட்டார்களா? ஏன் புகார் கொடுக்கல? பிரசாந்த் பூஷன் கலக்கல் வாதம்!
ரபேல் ஒப்பந்த ஆவணங்களை திருடிவிட்டார்கள் என்றால் ஏன் மத்திய அரசு புகார் அளிக்கவில்லை என்று ரபேல் வழக்கில் மனுதாரர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
டெல்லி: ரபேல் ஒப்பந்த ஆவணங்களை திருடிவிட்டார்கள் என்றால் ஏன் மத்திய அரசு புகார் அளிக்கவில்லை என்று ரபேல் வழக்கில் மனுதாரர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ரபேல் ஊழல் வழக்கு மீதான மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் ஆவணங்கள் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த ஆவணங்களை விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , நீதிபதிகள் கே.எம் ஜோசப், எஸ்.கே கவுல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசுக்கு எதிராக மனுதாரர் பிரசாந்த் பூஷன் கடுமையான வாதங்களை வைத்தார்.
ரபேல்.. ஊழல் வழக்கில் உளவு ரகசியங்கள் கூட விசாரிப்போம்.. மத்திய அரசுக்கு நீதிபதிகள் விளாசல்!
பிரசாந்த் பூஷன் வாதம்
ரபேல் வழக்கில் இன்று வாதம் செய்த மனுதாரர் பிரசாந்த் பூஷன், ரபேலில் வெளியான ஆவணங்கள் எல்லாம் தற்போது பொதுவில் இருக்கிறது. மக்கள் எல்லோரும் இந்த ஆவணங்களை பார்த்துவிட்டார்கள். மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். அதனால் ரபேல் ஆவணங்களை நீதிமன்றம் விசாரிப்பதே சரியாக இருக்கும். மத்திய அரசு எதை சொல்லியும் இந்த ஆதாரத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
என்ன சொன்னார் பிரசாந்த் பூஷன்
ரபேல் ஆவணங்களை திருடினார்கள் என்றால் புகார் அளித்து இருக்கலாமே?. அரசே சில மீடியாக்கள் மூலம் ரபேல் ஆவணங்களை வெளியிட்டது. அரசுக்கு தேசிய பாதுகாப்பு முக்கியம் இல்லை. அரசு சில முக்கியஸ்தர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே முக்கியம். ரபேலில் தனியாக பேரம் செய்தவர்களை அரசு காக்க பார்க்கிறது.
பிரசாந்த் பூஷன் கடுமையான கேள்வி
சிஏஜி ரபேல் விலை விவரங்களை வெளியிடாது என்பது எப்படி அரசுக்கு தெரிந்தது. எப்படி நவம்பர் மாதமே அரசு இதை அறிந்துகொண்டது. இதற்கு அரசு தரப்பு, ரபேல் விலையை வெளியிட கூடாது என்று பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். ஒப்பந்தத்தால்தான் சிஏஜி விலை விவரங்களை வெளியில் விடவில்லை என்று பதில் அளித்தது.
2ஜி வழக்கு
அதன்பின் தொடர்ந்த பிரசாந்த் பூஷன், 2ஜி வழக்கில் கசிந்த ஆதாரங்களை நீதிமன்றம் விசாரித்தது. ரபேல் வழக்கிலும் கசிந்து இருக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். ஆதாரம் சரியாக இருக்கும்பட்சத்தில் அது எப்படி வந்தது என்று பார்க்க தேவையில்லை. அதனால் இதை தாராளமாக நீதிமன்றம் விசாரிக்கலாம்.
வியட்நாம் போர்
வியட்நாம் போர் குறித்த ராணுவ ரகசியங்களை அமெரிக்க நீதிமன்றம் விசாரித்தது. பென்டகன் பேப்பர் வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ராணுவ ரகசியங்கள் விசாரித்தது. அதேபோல் இந்திய உச்ச நீதிமன்றமும் ராணுவ ரகசியமாக இருந்தாலும் விசாரிக்க வேண்டும். இரண்டு வழக்கும் ஒரே மாதிரியான வழக்குதான், என்று கூறி பிரசாந்த் பூஷன் தன்னுடைய வாதத்தை முடித்தார்.