ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.. சுப்ரீம் கோர்ட் உறுதி!
ரபேல் ஒப்பந்த தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை வெகு விரைவில் நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: ரபேல் ஒப்பந்த தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை வெகு விரைவில் நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
ரபேல் வழக்கு மீண்டும் உச்சம் பெற்று இருக்கிறது. இந்த முறை புதிய நிறைய ஆதாரங்கள் இந்த வழக்கில் வெளியாகி உள்ளது. அதேபோல் புதிய குற்றச்சாட்டுகளும் இதில் எழுந்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், மனுதாரர் தரப்புகள் எல்லாம் மிக வலுவான ஆதாரங்களை இந்த முறை சேகரித்து இருக்கிறது. இதனால் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன வழக்கு
ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது.
தீர்ப்பு வழங்கியது
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது. ஆனால் இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் வரிசையாக மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் இதன் மீதான விசாரணை இன்னும் நடக்காமல் உள்ளது.
என்ன கேள்வி
இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், இந்த வழக்கை உடனே விசாரிக்கும்படி மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் அளித்து இருந்தார். அதில், இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 14ம் தேதி வந்தது. உடனே மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இரண்டு மாதமாக இன்னும் இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறினார்.
என்ன பதில்
இதற்கு பதில் அளித்த உங்கள் கோரிக்கை எனக்கு புரிகிறது. இது குறித்து உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டும். விரைவில் மறுசீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும். எவ்வளவு விரைவில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொள்வோம்.
காரணம்
ரபேல் வழக்கை விசாரித்த அமர்வு தற்போது இல்லை. அவர்கள் வேறு வழக்குகளை விசாரிக்கிறார்கள். இதனால் அதே அமர்வை வைத்து விசாரிக்க வேண்டும் என்பதால், இதை விசாரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அந்த அமர்வு மீண்டும் அமைக்கப்பட்ட பின் வழக்கு விசாரணைக்கு விரைவில் எடுத்துக்கொள்ளப்படும்.