மெய்சிலிர்க்க வைக்கும் இந்திய குடியரசு தின அணிவகுப்பு - உலகமே வியந்து பார்க்கும் தருணம்
டெல்லி: குடியரசு தின விழாவில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
நாட்டின் 72-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அணிவகுப்பில் கலந்து கொள்ளும் 32 அலங்கார தயாரிப்புகளில், லடாக் யூனியன் பிரதேச தயாரிப்புகள் முதல் முறையாக பங்கேற்கிறது.
லடாக் பகுதியில் லே என்ற ஊரில் அமைந்துள்ள இந்திய வானியல் தொலைநோக்கு நிலையம் லடாக் சார்பாக அணிவகுப்பில் கலந்து கொள்கிறது. அதேபோல் ரபேல் போர் விமானங்கள், வங்கதேச ராணுவ அணிவகுப்பும் நடைபெறுகிறது.
ரபேல் போர் விமானங்கள்
முதன்முதலாக ரபேல் போர் விமானங்கள், குடியரசு தின விழாவில் கலந்துகொள்கின்றன. இவை குறைந்த உயரத்தில் பறக்கும் "Vertical Charlie" முறையில் சாகசத்தில் ஈடுபடுகிறது.
இந்தியாவின் இராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக, T-90 டாங்கிகள், சம்விஜய் மின்னணு போர் அமைப்பு மற்றும் சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானங்களின் அணிவகுப்பும் இடம்பெறுகிறது.
மொத்தம் 38 இந்திய விமானப்படை விமானங்களும், இந்திய ராணுவத்தின் நான்கு விமானங்களும் விண்ணை அலங்கரிக்க உள்ளன.
சீறிப்பாயும் தேஜஸ்
ஒளியின் வேகத்தை விஞ்சும் தேஜஸ் போர் விமானங்கள், ஹெலிகாப்டரில் இருந்து சீறிப்பாய்ந்து எதிரிகளின் டாங்கிகளை தாக்கும் திறன் கொண்ட துருவஸ்திரா ஏவுகணையும் அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.
Light Combat ஹெலிகாப்டர் (எல்.சி.எச்), சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானம் மற்றும் ரோஹினி ராடார் ஆகியவை அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.
பிரமோஸ் ஏவுகணை
அதேபோல், இந்திய ராணுவத்தின் முக்கிய போர் டாங்கியான டி -90 பீஷ்மா, பி.எம்.பி- II- சரத், பிரமோஸ் ஏவுகணை அமைப்பு, மல்டி லாஞ்சர் ராக்கெட் சிஸ்டம் பினாகா, மின்னணு போர் அமைப்பு சம்விஜய் போன்றவை அணிவகுப்பை அலங்கரிக்கின்றன.
மேம்படுத்தப்பட்ட டாங்கியான ஷிலிகா-வை இந்திய ராணுவத்தின் ஒரே பெண் படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது.
1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது பயன்படுத்தப்பட்ட கடற்படைக் கப்பல் (ஐ.என்.எஸ்) விக்ராந்த் உள்ளிட்டவை இந்திய கடற்படை அணிவகுப்பில் இடம்பெறுகிறது.
வங்கதேச ராணுவ அணிவகுப்பு
மேலும், வங்கதேச ராணுவப் படையின் கமாண்டர் அபு முகமது ஷாஹ்னூர் ஷாவோன் தலைமையில் சுமார் 122 ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடைபெறுகிறது. வங்கதேச ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
வங்கதேசம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் வங்கதேச ராணுவம் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.