ரபேல் ஒப்பந்தத்தில் 2 முக்கிய விதிகளை தளர்த்திய மத்திய அரசு.. என்ன நடந்தது?!
ரபேல் ஒப்பந்த ஊழலில் புதிய திருப்பமாக ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்காக பாஜக அரசு நிறைய ஒப்பந்த விதிகளை தளர்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
Recommended Video
டெல்லி: ரபேல் ஒப்பந்த ஊழலில் புதிய திருப்பமாக ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்காக மத்திய அரசு நிறைய ஒப்பந்த விதிகளை தளர்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
ரபேல் ஒப்பந்த விவகாரம் மீண்டும் உச்சம் அடைந்து இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் முதலில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் மனுதாரர்கள் தரப்பு திணறிக் கொண்டு இருந்தது. இந்த நிலையில்தான் தி இந்து பத்திரிக்கையில் மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் தொடர்ச்சியாக இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ரபேல் தொடர்பாக என்.ராம் புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய பாஜக அரசு, இந்த ஒப்பந்தத்தில் வேண்டும் என்றே சில விதிகளை தளர்த்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
விதிகள் என்ன
இந்திய ராணுவ, விமான ஒப்பந்த விதிகளில் இரண்டு முக்கியமான விஷயங்களை அடிப்படையாக கடைபிடிக்க வேண்டும். முதலில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். இது முறையற்ற கமிஷன் கைமாறுவதற்கு எதிரான விதியாகும்.. இன்னொன்று வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த கணக்குகளை பார்க்க அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவுகளை எடுப்பது.
மாற்றம் செய்தனர்
ஆனால் இந்த இரண்டு விதிகளையும் மோடி அரசு காற்றில் பறக்கவிட்டு இந்த ஒப்பந்தத்தை செய்து இருக்கிறது. அதன்படி, முதல் விதியான பேச்சுவார்த்தை விதியில் முறைகேடு நடந்து உள்ளது. அதாவது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழுவுடன் மட்டும் பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தனிப்பட்ட முறையில் பிரதமர் அலுவலகமும் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தி இந்து ராம் தெரிவித்துள்ளார்.
இன்னொரு விதி என்ன
அதேபோல் ஒப்பந்தத்தின் கணக்கு வழக்குகளை பார்க்க டஸால்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய ஒப்பந்த விதிமுறைகளின்படி மிக மிக தவறு. ஆனால் இந்த இரண்டு விதிகளையும் கண்டுகொள்ளாமல்தான் இந்த மொத்த ஒப்பந்தத்தை செய்து இருக்கிறார்கள். இதனால், இந்த ஒப்பந்தத்தில் டஸால்ட் நிறுவனத்திற்குதான் அதிக லாபம் கிடைத்து இருக்கிறது.
எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்
இந்த விதிமுறை மீறலுக்கு அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதேபோல் ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்று இருந்த அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் அனைத்தையும் மீறி பிரதமர் அலுவலகம் நடத்திய தனிப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆதாரம்
ஏற்கனவே பிரதமர் அலுவலகம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த ஆதாரங்கள் வெளியானது. தற்போது அதன்மூலம் விதிகளும் தளர்த்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் ரபேல் வழக்கில் என்ன மாதிரியான ஆதாரங்கள் வெளியாகும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.