பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்
Recommended Video
டெல்லி: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நாட்டின் பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும் அரசு உடடினயாக மின்சாரம் மற்றும் வங்கி சாரா நிதித்துறை நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், "தொழில்துறை கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் கூறுவதை நம்மால் கேட்க முடிகிறது.
இதில் இருந்து மீள அரசிடம் இருந்து ஏதோ ஒரு ஊக்குவிப்பு தேவை என தொழில் அதிபர்கள் கூறுகிறார்கள். நாட்டின் பொருளதார வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய சீர்திருத்தங்கள் அவசியம்.
வங்கிசாராத நிதிநிறுவனங்கள்
நுகர்வு தேவை குறைந்ததும். முதலீடுகள் சரிந்ததால் பொருளாதாரம் மிகவும் சரிந்து கிடக்கிறது. வங்கித்துறை சாராத நிதிநிறுவனங்களில் பணபுழக்கம் கடுமையாக குறைந்துள்ளது. எனவே வங்கி சாராத நிதி நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நமக்கு புரிதல் அவசியம்
நாட்டின் வளர்ச்சி 2அல்லது 3 புள்ளி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த புரிதலே நமக்கு இப்போது மிகவும் முக்கியம். எனவே மின்சாரத்துறையிலும், வங்கி சாராத நிதித்துறையிலும் உள்ள பிரச்சனைகளை அடுத்த நாளிலோ அல்லது அடுத்த 6 மாதத்திலோ நாம் தீர்த்தே ஆக வேண்டும். ஏனெனில் உடனே இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
நன்கு யோசித்து முடிவு
தனியார் துறையில் முதலீடுகளை அதிகரிக்க புதிய சீர்த்திருத்தங்கள் இப்போது தேவை. இன்றைய நெருக்கடியில் சலுகைகள் ஏதோ ஒரு விதமான ஊக்குவிப்பு நீண்ட காலத்துக்கு பயன்தராது. எனவே இந்திய சந்தைகள், இந்திய தொழில்கள், நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் நன்கு யோசித்து சீர்திருத்தங்களை எடுக்க வேண்டிய தேவை இப்போது நிலவுகிறது.
தவறான கொள்கை முடிவு
ஜிடிபி வளர்ச்சி குறித்து முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறிய விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் சில ஜிடிபி புள்ளி விவரங்களை வைத்து நம்முடைய வளர்ச்சியை மிகை மதிப்பீடு செய்ய முடியும் . எனவே ஜிடிபி புள்ளிவிவரங்கள் குறித்து தனியார் நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்திட வேண்டும். ஜிடிபி புள்ளி விவரங்கள் தவறான கொள்கை முடிவு எடுக்க காரணமாக அமைந்துவிடக்கூடாது" என்றார்.