லாலு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த.. முன்னாள் அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் திடீர் மரணம்
டெல்லி: முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் நீண்ட கால நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சரும், சமீபத்தில் லாலு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் திடீரென மரணமடைந்துள்ளார்.
முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முற்போக்குத் திட்டங்களில் ஒன்றான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணகர்த்தாவே ரகுவன்ஷ் பிரசாத் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
74 வயதான ரகுவன்ஷ் பிரசாத் சிங், லாலு பிரசாத்தின் மிக நெருங்கிய நண்பராக பல காலமாக அவருடன் பயணித்தவர். ராஷ்டிரிய ஜனதாதளத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கி வந்தவர். மத்திய அமைச்சராக மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். விவசாயிகளின் நிலையை நன்கு உணர்ந்து அதற்கேற்ற திட்டங்களை செயல்படுத்தியவர்.
இந்தியாவின் ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை முன்னின்று கொண்டு வந்தவர். அதில் ஒன்றுதான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்.. அதாவது 100 நாள் வேலை திட்டம். இந்தத் திட்டம்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையும் தொடர்ந்து ஆட்சிக்கு வர முக்கிய உதவியாக இருந்தது.
டெல்லி கலவரம்.. சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பெயர் துணை குற்றப்பத்திரிக்கையில் சேர்ப்பு!
சிலநாட்களுக்கு முன்பு நான் கட்சியை விட்டு விலகுகிறேன் என்று அறிவித்து பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதனால் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தாவப் போவதாக பரபரப்பு கிளம்பியது. இந்த நிலையில்தான் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா வந்து குணமடைந்திருந்தவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங். கொரோனாவுக்குப் பிந்தைய கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு உடல் நலம் குன்றியதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்ததால் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து அவர் மரணமடைந்தார்.
ரகுவன்ஷ் பிரசாத்தின் மரணம் பீகார் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளைப் பரப்பியுள்ளது. பீகாரின் வைஷாலி லோக்சபா தொகுதியிலிருந்து 5 முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரகுவன்ஷ் பிரசாத். இருப்பினும் 2014, 2019 ஆகிய இரு தேர்தல்களிலும் அவர் அடுத்தடுத்து தோல்வியடைந்தார். இதனால் சில காலம் அரசியலில் தீவிரமாக செயல்படாமலும் இருந்து வந்தார்.
லாலுவின் மகன் தேஜ்ஸவி யாதவுடன் இவருக்கு சரியான உறவு இல்லை. ஆரம்பத்தில் அவரைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்து வந்தவர் பின்னர் உறவு கசந்ததால் ஒதுங்கிக் கொண்டார். இந்த நிலையில் லாலுவுடனும் உறவு கசந்தது. கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில்,லாலு கட்சி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நிதீஷ் குமாரை நமது கூட்டணியில் சேர்த்து பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று லாலுவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் ரகுவன்ஷ் பிரசாத். ஆனால் அதற்கு லாலு ஒத்துவரவில்லை.
இந்த நிலையில்தான் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார் ரகுவன்ஷ் பிரசாத். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது மரணச் செய்தி வந்துள்ளது.