வாழைப்பழத்துக்கு ரூ. 442 வாங்குனது சரி தான்.. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தடாலடி
டெல்லி: 2 வாழைப்பழங்களுக்கு ரூ.442 வசூலித்த ஹோட்டலின் நடவடிக்கையில் தவறு இல்லை என்று, இந்திய ஹோட்டல் மற்றும் உணவகங்களின் கூட்டமைப்பு (FHRAI) தெரிவித்துள்ளது.
பிரபல ஹிந்தி நடிகர் ராகுல் போஸ் உங்களில் பலருக்கும் தெரிந்தவர்தான். ஏனெனில், இவர் தமிழில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
இந்த நிலையில், பாலிவுட் பட சூட்டிங்கிற்காக, ராகுல்போஸ் சண்டிகர் சென்றிருந்தார். அங்குள்ள ஜேடபிள்யூ மேரியட் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பிறகு 2 வாழைப்பழங்கள் தேவை என ஹோட்டல் பணியாளரிடம் ஆர்டர் செய்தார். ஹோட்டல் ஊழியர்கள் அவரது அறைக்கு வாழைப் பழங்களை கொண்டு சென்றனர்.
வாழைப் பழங்களுடன் கொண்டு வந்த பில்லில் 2 வாழைப்பழங்களின் விலை ரூ.442 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராகுல் போஸ், பழங்களையும் பில்லையும் வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சைக்கு காரணமாகியது.
இதையறிந்ததும், கலால் மற்றும் வரி விதிப்பு ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டார். பழங்களுக்கு வரி விதிப்பது இல்லை என்றும், ஹோட்டல் நிர்வாகம் வரிவிதித்தது எப்படி என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ஹோட்டல் அளித்த பதிலில் திருப்தியில்லை என கூறி, ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே, இந்திய ஹோட்டல் மற்றும் உணவகங்களின் கூட்டமைப்பு (FHRAI) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஹோட்டல் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதிலும் வாங்குவதிலும் ஈடுபடவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது தங்குமிட சேவையையும், விருந்தினர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதையும் உள்ளடக்கிய உணவக சேவையையும் வழங்குகிறது.
சந்தை விலையில் வாழைப்பழங்களை வாங்கக்கூடிய சில்லறை விற்பனையகத்தைப் போல் ஹோட்டல் கிடையாது. ஒரு ஹோட்டல் சேவை, தரம், தட்டு, பழங்களை வெட்டும் உபகரணங்கள், அதனுடன் சுத்திகரிப்பு, சுற்றுப்புற தூய்மை மற்றும் ஆடம்பரத்தை வழங்குகிறது, வெறும் பொருட்களை மட்டும் வழங்குவது இல்லை. சாலையோர ஸ்டாலில் பத்து ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு காபி ஒரு சொகுசு ஹோட்டலில் ரூ .250 க்கு வழங்கப்படலாம். " இவ்வாறு அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.