மார்ச் 1 முதல் ராகுலின் லோக்சபா பிரச்சாரம்… மகாராஷ்டிராவில் ஒரே மேடையேறும் ராகுல், பிரியங்கா
டெல்லி:வரும் 1ம் தேதி முதல் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்குகிறார். முதல் கட்டமாக.... அவர் மகாராஷ்டிரா மாநிலம் துலே என்ற இடத்தில் இருந்து தமது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
மார்ச்சில் அறிவிப்பதாக எதிர்பார்க்கப்படும் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக முன்கூட்டியே துவக்கி இருக்கிறது. அதில் சற்று பின்தங்கி விட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சிகளின் பல்வேறு பிரிவுகளின் மாநாட்டு மேடைகளில் மட்டும் பேசி வருகிறார்.
பல மாநிலங்களின் கூட்டணி பேச்சுவார்த்தைகளினால் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரம் தாமதமாகி இருக்கிறது. இந்நிலையில் வரும் 1ம் தேதி முதல் அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தமது லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள துலே பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தின் வழியாக அவர் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார். அந்த பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தியும் மேடையேறுகிறார்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறி இருப்பதாவது: நிகழ்ச்சியை வடிவமைக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறோம். வரும் 1ம் தேதி துலே நகரில் பிரச்சாரம் துவங்குகிறது. பிரச்சாரத்தில் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வந்து செல்ல துலே நகரம் வசதியாக இருக்கும்.
இந்த பேரணியில்... கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பங்குபெறும். அதற்கான பணிகளில் நாங்கள் இறங்கி இருக்கிறோம் என்று அவர் கூறினார்.