ஆந்திர மக்களிடமிருந்தும் மோடி திருடிவிட்டார்.. சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ராகுல் விமர்சனம்!
டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவை நேரில் சென்று சந்தித்து ராகுல் காந்தி ஆதரவு அளித்தார்.
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாடு ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நடக்கும்.
டெல்லியில் உள்ள ஆந்திர பிரதேச பவனில் இந்த போராட்டம் நடக்கிறது. ஆந்திராவை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார், உடனே ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தை சந்திரபாபு நாயுடு நடத்தி வருகிறார்.
ராகுல் உள்ளிட்டோர் ஆதரவு
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து இருக்கிறார்கள். இன்று மாலை சந்திரபாபு நாயுடுவை முக்கிய அரசியல் தலைவர்கள் சென்று நேரில் சந்திக்க வாய்ப்புள்ளது. தற்போது இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் சந்திரபாபு நாயுடுவை நேரில் சென்று அவர் சந்தித்தார்.
பேட்டி அளித்தார்
இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது, நான் ஆந்திர பிரதேச மக்களுடன் இருக்கிறேன். என்ன மாதிரியான பிரதமர் இவர்? அவர் கொடுத்த வாக்குறுதியை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஆந்திர மக்களை அவர் ஏமாற்றிவிட்டார். ஆந்திராவின் கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை.
திருடினார்
பிரதமர் மோடி எங்கே சென்றாலும் பொய் சொல்கிறார். அவருக்கு பொய் சொல்வது பெரிய கலையாகிவிட்டது. அவருக்கான மரியாதையை அவர் இழந்துவிட்டார். தற்போது ஆந்திர மக்களிடமிருந்தும் அவர் திருடிவிட்டார்.
ரபேல் ஒப்பந்தம்
ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி திருடி இருக்கிறார். ஒப்பந்தத்தில் திருடுவதற்கு ஏற்றபடி அவர் விதிகளை மாற்றி இருக்கிறார். எந்த பாதுகாப்பு ஒப்பந்தமும் இதுவரை இவ்வளவு மோசமாக செய்யப்படவில்லை, என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.