உட்கட்சிப் பூசல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க ராகுலால் மட்டுமே முடியும்.. வீரப்ப மொய்லி
டெல்லி: நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் தேவைப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
17-வது மக்களவை தேர்தலில் கடந்த முறை போலவே இம்முறையும் பாஜக அபார வெற்றி பெற்றது. பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றி சாதனை நிகழ்த்திய நிலையில், காங்கிரஸ் கட்சியோ 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
54 இடங்களை பெற்றால் தான் எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்ற நிலையில், 52 இடங்களை மட்டுமே பிடித்த காங்கிரஸ் எதிர்கட்சி என்ற நிலையை கூட எட்ட முடியாமல் பரிதாப நிலையில் உள்ளது. இதனையடுத்து விரக்தியடைந்த கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார்.
ஆனால் கட்சியின் செயற்குழு ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்து விட்டது. தங்களுக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை என வலியுறுத்தியது.ஆனால் தற்போதும் தனது ராஜினமா முடிவில் ராகுல் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற ஒன்றரை ஆண்டுகளில், தேர்தல் தோல்வியை காரணம் காட்டி பதவி விலகுவது ராகுல் காந்திக்கு அழகல்ல என்றார். தன்னை நிரூபித்து காட்ட ராகுல் காந்தி மேலும் கால அவகாசம் எடுத்து கொள்ள வேண்டும்.
மக்களவை தேர்தல் தோல்வியிலிருந்து வெளிவந்து ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களில் அவர் கவனம் செலுத்த வேண்டும். மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸை வெற்றி பெற வைக்க ராகுல் காந்தி தயாராக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இப்ப முதலிரவா முக்கியம்... மொய்க்கணக்கை தந்துட்டு.. மகனை தடுத்து நிறுத்திய தந்தைக்கு விபரீதம்!
மேலும் கட்சியின் மாநில பொறுப்பாளர் பதவிகளுக்கு சரியான நபர்களை தேர்வு செய்து நியமிப்பதிலும் ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும். தேர்தல்களில் போட்டியிட தகுதியான காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
தவிர உட்கட்சி தேர்தல் நடத்தி அதன் மூலம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து கட்சிக்கு புத்துயிர் அளிக்க வலியுறுத்தியுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியில் களையெடுக்கும் நேரமிது. கட்சிக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த தருணத்தில் தான் ராகுல் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
உட்கட்சிப் பூசல்களை எவ்வித கருணையும் காட்டாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இது ராகுல் காந்தியால் மட்டுமே முடியும் என்றார். காங்கிரஸ் கட்சியில் இளம் நிர்வாகிகள் உள்ளனர் என்பதை பிறருக்கு உணர்த்த வேண்டியுள்ள கட்டாயத்தில் இருக்கிறோம் எனவும் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.