இது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி
டெல்லி: ஜெய் ஜவான், ஜெய் கிசான் என முழங்கிவிட்டு ராணுவ வீரரை வைத்து போராடும் விவசாயியை அடிக்க செய்வதா, இது மிகவும் ஆபத்தானது என கூறி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு அண்மையில் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது.
இந்த சட்டத்தால் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்காது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது.
பஞ்சாப்
இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக மற்ற மாநில விவசாயிகளும் வாகனங்களில் டெல்லி நோக்கி வருகிறார்கள்.
எல்லைகளில் சீல்
இதனால் எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. போராட்டக்காரர்களை கலைக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ஹரியானா, பஞ்சாப் எல்லையான சம்போ பகுதியில் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை காவல் துறையினர் கலைக்க முயற்சித்தனர்.
புகைப்படம் வைரல்
காவல் துறை தடியடி குறித்து ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சுட்டிக் காட்டி ராகுல்காந்தி கூறுகையில் இது மிகவும் வருந்துதலுக்குரிய புகைப்படம், ஜெய் ஜவான், ஜெய் கிசான், அதாவது ராணுவ வீரரை போற்றுவோம், விவசாயியை போற்றுவோம் என்பதாகும்.
புகை
ஆனால் இன்றோ மோடியின் அடக்குமுறையால் விவசாயிக்கு எதிராக ராணுவ வீரரை நிற்க வைத்துவிட்டார். இது மிகவும் ஆபத்தானது என்றார். ராகுல் வெளியிட்டதை அடுத்து இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி தற்போது அனைவரின் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.