மகா. ரயில் விபத்துக்காக வெட்கப்பட வேண்டும்- ராகுல் காந்தி; எடப்பாடி பழனிசாமி, வைகோ இரங்கல்
டெல்லி: மகாராஷ்டிராவில் பிற மாநில தொழிலாளர்களை பலி கொண்ட ரயில் விபத்து சம்பவத்துக்காக நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் சத்தீஸ்கர் செல்ல வேண்டிய பிற மாநில தொழிலாளர்கள் தண்டவாளத்தில் படுத்திருந்தனர். அப்போது அவர்கள் மீது சரக்கு ரயில் மோதியது.
நாட்டை அதிரச் செய்திருக்கும் இச்சம்பவத்தில் மொத்தம் 17 பேர் பலியாகி உள்ளனர். பிற மாநில தொழிலாளர்கள் பலியாகி இருப்பது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் உருவாக்கி உள்ளது.
Mothers day: கண்ணே...மணியே.. என்றெல்லாம் அம்மா கொஞ்சமாட்டார்... நினைவுகளை அசைபோடும் சுஜாதாபாபு
வெட்கப்பட வேண்டும்- ராகுல்
டெல்லியில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவுரங்காபாத் சம்பவத்துக்காக நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டும். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாட்டை கட்டியெழுப்பும் தொழிலாளர்களை நாம் நடத்தும் விதம் நம்மை வெட்கப்பட வைக்கிறது என வேதனை தெரிவித்திருந்தார்.
எடப்பாடி இரங்கல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் சுமார் 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த கொடிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
வைகோ அதிர்ச்சி
மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ வெளியிட்ட அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு நடந்து சென்ற வெளி மாநில தொழிலாளர்கள் மகாராஷ்டிரா மாநிலம் - அவுரங்காபாத் கர்மத் அருகே தூக்கம் காரணாமாக தண்டவாளத்தில் தூங்கியுள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் அந்தத் தண்டவாளத்தில் சென்ற காலி சரக்கு ரயில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மீது ஏறியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது.
விபத்து சொல்லும் பாடம்
வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாகத் திரும்புவதற்கு மத்திய - மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை மேலும் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்தக் கோரச் சம்பவம் உணர்த்துகிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் நிதி உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.