இதுதான் பெண்களை காக்கும் லட்சணமா? உத்தரகாண்டில் பெண்ணை கொன்ற பாஜக நிர்வாகி மகன்.. ராகுல் அட்டாக்!
டெல்லி: பெண்களை 'பொருட்களாக' பாஜகவினர் நடத்துகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்ரகாண்ட் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில பாஜக மூத்த தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ள ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது
காணவில்லை
உத்ரகாண்ட் மாநிலத்தின் பாவரி மாவட்டத்தில் யம்கேஷ்வர் தொகுதியில் ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வந்தது. இது அப்பகுதி பாஜக தலைவராக உள்ள வினோத் ஆர்யாவின் மகனான புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானதாகும். இதில், 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் கடந்த 18ம் தேதி தனது மகளை காணவில்லையென இளம்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணை
அதேபோல ரிசார்ட் சார்பாகவும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் வெளியில் தீவிர விசாரணையும், புல்கித் ஆர்யாவிடம் கடமைக்கு விசாரணையும் நடத்தப்பட்டதாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. புல்கித் ஆர்யா உள்ளூரில் செல்வாக்குள்ள நபரின் மகன் என்பதால் விசாரணையில் இந்த பின்னடைவு இருந்தாக எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. ஆனால் இந்த விவகாரம் ஒரு சில நாட்களிலேயே சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியே கசிய தொடங்கியது.
கைது
பின்னர் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், ரிசார்ட்டில் பணியாற்றி வந்த இளம் பெண்ணை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாகவும், அப்பெண் அதற்கு மறுத்ததால் கொலை செய்ததாகவும் ரிசார்ட் ஊழியர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் இளம் பெண்ணின் உடல் அருகில் உள்ள கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அம்மாநில பாஜக மூத்த தலைவரின் மகன் ஆர்யா புல்கிட் கைது செய்யப்பட்டார்.
வாட்ஸ்அப் மெசேஜ்
வழக்கு நடந்து கொண்டிருக்கையில், இளம்பெண்ணின் வாட்ஸ்அப் சேட்கள் ஸ்கிரீன்ஷாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவின. அதில், தன்னை ரிசார்ட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் இரவு முழுவதும் இருக்க ரிசார்ட் நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும், இதற்காக ரூ.10,000 தருவதாக கூறியதாகவும் தனது தோழிகளுக்கு இளம்பெண் மெஸேஜ் அனுப்பியுள்ளது தெரிய வந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அறிக்கை
அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவின் மிகப்பெரும் பலம் பெண்கள்தான். ஆனால், பாஜகவினர் இவர்களை வெறும் பொருட்களாக நடத்துகின்றனர். இதற்கான உதாரணம்தான் உத்ரகாண்ட் சம்பவம். இந்த சம்பவத்திலிருந்து குற்றவாளியை பாதுகாக்க பாஜகவின் முதலமைச்சர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த நாங்கள் அனுமதியோம்" என்று கூறியுள்ளார்.