மக்கள் மீது போர்...ராகுல் பாத்து பேசுங்க...எச்சரித்த ஸ்மிருதி இரானி
டெல்லி : இந்திய மக்களுக்கு எதிராக போரை அறிவிக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது கலவரம் வெடித்தது. இதில் விவசாயி ஒருவர் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தார். போலீசார் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 25 க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காந்தி நினைவு தினத்தன்று..விவசாய சட்டங்களுக்கு எதிராக.. உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கும் விவசாயிகள்
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். .இருப்பினும் சிகு எல்லை பகுதியில் தொடர்ந்து போலீசாருக்கும், விவசாயிகள் தரப்பிற்கும் மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொள்வதால் அப்பகுதியே போர்களமாக காட்சி அளிக்கிறது.
நாடே பற்றி எரியும் :
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்களை எதிர்த்து தான். அதுவும் டில்லி மற்றும் அதனை சுற்றிய எல்லைக்குள் மட்டும் தான். இந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை மத்திய அரசு இனியும் திரும்பப் பெறாவிட்டால் மற்ற மாநிலங்களுக்கும் இந்த போராட்டம், கலவரம் பரவும் என மத்திய அரசை எச்சரித்திருந்தார். ஆனால் போலீசார் தாக்கப்பட்டது பற்றியோ, அவர்கள் காயமடைந்தது பற்றியோ ராகுல் ஏதும் குறிப்பிடவில்லை.
இந்திய மக்கள் மீது போரா :
அவர் ட்வீட் செய்த சிறிது நேரத்திலேயே ஸ்மிருதி இரானி அதற்கு பதிலளித்திருந்தார். அதில், ராகுல் காந்தி, இந்திய மக்கள் மீது போரை அறிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என அவர் எச்சரிக்கிறார். நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் ராகுலின் வன்முறை அழைப்பை யாரும் கண்டுகொள்ளக் கூடாது என ஒவ்வொருவரையும் கேட்குக் கொள்கிறேன்.
கலவரத்தை தூண்டும் காங்கிரஸ் தலைவர் :
ஜனவரி 26 அன்று நடந்த கலவரத்தை போன்று ஒவ்வொரு நகரங்களிலும் , கிராமங்களிலும் நடப்பதை நாடு பார்க்கும் என ராகுல் அறிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் அமைதி காக்க வேண்டும் என மக்களை வலியுறுத்துவதற்கு பதிலாக வன்முறையை அதிகப்படுத்த கேட்டுள்ளார் என்றார்.
ட்விட்டரில் குழப்பும் ராகுல் :
முன்னதாக கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகள் கடும் குளிரிலும் டில்லியில் 2 மாதங்களாக நடத்திய போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் வேளாண் சட்டங்களை குப்பை தொட்டியில் போட வேண்டும். பிரதமர் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறார். விவசாயிகள் தங்களின் போராட்டத்தை ஒரு இன்ச் கூட திரும்பப் பெற வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றார். ஆனால் அதே சமயம், டில்லியில் கலவரம் நடந்த போது, விவசாயிகள் அமைதி காக்க வேண்டும் எனவும், போராட்டம் தீர்வாகாது எனவும் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார்.