அதிமுக வேகத்தை பார்த்து மிரண்ட காங்கிரஸ்.. ராகுல் காந்தி அவசர ஆலோசனை
டெல்லி: தமிழக காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர்களுடன் அக் கட்சி தேசிய தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் கட்சிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இன்று காலை பாமகவுடன் அதிமுக தொகுதி பங்கீட்டை முடிவு செய்து விட்டது.
இதன்பிறகு, பாஜக தமிழக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான, பியூஸ் கோயலுடன் அதிமுக இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையும் ஆரம்பித்துவிட்டது.
ஆனால் மறுபக்கம் திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை மந்தகதியில் நடந்து வருகிறது. ஏற்கனவே கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த கூட்டணியில் இல்லை என்று ஆகிவிட்ட நிலையில், இப்போது பாமகவும் அதிமுக பக்கம் போய் விட்டது. கட்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக கூட்டணி பலம் பெற்று வருவதை அறிந்து உள்ள ராகுல் காந்தி உடனடியாக தனது இல்லத்தில் தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். திமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு பற்றி முடிவு செய்வது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இந்த கூட்டத்தில் உடனிருந்தார். ப.சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர். ஈவிகேஎஸ் இளங்கோவன், ராமசாமி ஆகியோரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் ஆகும்.