நான் உங்களுடன் இருக்கிறேன் என உணர்த்தவே வயநாட்டில் போட்டி.. ராகுல் பரபரப்பு விளக்கம்
Recommended Video
டெல்லி: நான் உங்களுடன் இருக்கிறேன் என காட்டவே வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது தந்தை ராஜீவ் காந்தியின் தொகுதியான அமேதியில் ராகுல் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.
இந்நிலையில் தென்னிந்தியாவில் ஏதாவது ஒரு தொகுதியிலும் ராகுல் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விரும்பினர். அதன்படி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது அவர் கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வயநாட்டில் ராகுல் போட்டியிடுவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் 54 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி இந்த கேள்விக்கான விளக்கத்தையும் அளித்தார். அவர் கூறுகையில் தென்னிந்தியாவில் போட்டியிடுமாறு பல தரப்பினர் என்னை வலியுறுத்தினர்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் ரத்து செய்யப்படும்.. காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி!
தங்களை கவனிக்க யாரும் இல்லை என்பதே தென்னிந்திய மக்களின் கவலையாகும். அதிலும் பிரதமர் மோடி தங்களை புறக்கணித்து விட்டனர் என தென்னிந்திய மக்கள் கருதுகின்றனர்.
தென் இந்தியா மக்களுடன் நாங்கள் உள்ளோம் என்பதை அவர்களுக்கு கூறிக் கொள்ளவே வயநாட்டில் போட்டியிடுகிறேன். எல்லாரும் இந்துக்கள்தான். ஆனால் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. எனவே மோடி இந்துத்துவா மட்டும் பேசாமல் தேசிய பாதுகாப்பு, விவசாயிகள், ஊழல், வேலைவாய்ப்புகள் குறித்து பேச வேண்டும் என்றார் ராகுல்காந்தி.