குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை.. ராகுலும், பிரியங்காவும் மனித உரிமை ஆணையத்தில் புகார்
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வன்முறை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக வந்த இந்து, கிறிஸ்துவர், பார்சி, புத்த மதத்தினர், சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதே அந்த சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும்.
குறிப்பாக மூன்று நாடுகள், 6 மதத்தினரை மட்டும் மத்திய அரசு குறிப்பிட்டதால் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வலுத்து வருகிறது. இந்த போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் நடந்தன.
இதில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பலர் பலியாகிவிட்டனர். இந்த உயிரிழப்புகளுக்கு போலீஸாரே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா, கட்சித் தலைவர்கள் நேற்று டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் இந்த வன்முறைகள் குறித்து புகார் அளித்தனர்.
இந்தியாவின் சிஏஏ அபாயகரமானது.. பாரபட்சமானது.. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் அதிரடி தீர்மானம்
அதிலும் குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போலீஸார் நடத்திய வன்முறை சம்பவங்கள், தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும் என இருவரும் கேட்டுக் கொண்டனர். மேலும் இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.