இந்திய நிலத்தை சீனாவுக்கு விட்டு கொடுத்து விட்டார் பிரதமர்... ராகுல் காந்தி கடும் தாக்கு!
டெல்லி: லடாக் விவகாரத்தில் பிரதமரால் சீனர்களுக்கு எதிராக நிற்க முடியவில்லை. அவர் நமது ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி ஏன், நமது நிலத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுக்கிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தியா, சீனா இடையே லடாக் எல்லையில் பல மாதங்களாக பதற்றம் நிலவிவருகிறது. பதற்றத்தை தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும், அரசு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இந்த பேச்சு வார்த்தையின் பலனாக பாங்காங் ஏரிக்கரையில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் போர் வாகனம், பீரங்கி வண்டிகளை அங்கிருந்து வெளியேற்ற தொடங்கி உள்ளார்.
இதற்கிடையே நாடளுமன்ற மக்களவையில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் மூலம், பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளில் படைகளைக் குறைப்பதற்கான உடன்படிக்கைக்கு வழி ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுத் தர மாட்டோம் என்று கூறினார்.
இந்தநிலையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி லடாக் விவகாரம் தொடர்பாக பேசியதாவது:- நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், கிழக்கு லடாக் நிலவரம் குறித்து எடுத்துரைத்தார். தற்போது நமது படைகள் நிலை 4-ல் இருந்து, 3 -க்கு மாற்றப்பட்டிருக்கிறது. நிலை 4, நமது நிலபரப்புதான். ஆனால், நமது படை அங்கிருந்து விலக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி ஏன், நமது நிலத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுக்கிறார்?
பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது விளக்கத்தில் டெப்சாங் சமவெளி குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சீனா அங்கிருந்துதான் இந்தியாவுக்குள் நுழைந்தது. உண்மை என்னவென்றால், சீனாவுக்கு பிரதமர் மோடி நமது நிலத்தை வழங்கிவிட்டார். இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும். பிரதமரால் சீனர்களுக்கு எதிராக நிற்க முடியவில்லை. அவர் நமது ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.