காங்., கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை.. ராகுல் உறுதி
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ள ராகுல் காந்தி, கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்திலும் தாம் தலையிடப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கடந்த முறையை போலவே இம்முறையும், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக தலைமையிலான தேிய ஜனநாயக கூட்டணி சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடியது.
ஆனால் அதே சமயம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, நாடு முழுவதும் சுமார் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. இந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்தே 303 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ தனித்து 52 இடங்களை மட்டுமே பிடித்தது.
யோகி ஆதித்யநாத், மோகன் பகவத்தை கடுமையாக சாடிய வாரணாசி பாடகி ஹர்த் கவுர் மீது தேசதுரோக வழக்கு
மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 54 தொகுதிகளில் வென்றிருக்க வேண்டிய சூழலில், 52 தொகுதிகளை மட்டுமே பெற்ற காங்கிரஸ் மிகவும் பரிதாபமாக காட்சியளித்து நிற்கிறது.
தேர்தல் படுதோல்வியையடுத்து பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஏற்கனவே தோல்வியால் கடும் விரக்தியில் இருந்த ராகுல் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்ததால் மேலும் நெருக்கடிக்குள்ளானார். இதனையடுத்து தனது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் செயற்குழுவிடம் அளித்தார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள், ராகுலின் ராஜினாமாவை ஏற்க முடியாது என கூறிவிட்டனர். ராகுலின் தலைமையே தங்களுக்கு தொடர்ந்து தேவை என்றும் கூறினர். ஆனாலும் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுத் தேர்தலில் தனது கட்சியின் மோசமான செயல்பாடு குறித்து அதிருப்தியடைந்து தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் முடிவு செய்து கிட்டத்தட்ட ஒரு மாதம் நெருங்க போகிறது. இந்நிலையில் தனது முடிவு குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ராகுல் பேட்டியளித்துள்ளார்.
அதில் தாம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலக எடுத்த முடிவில் எந்த வித மாற்றமும் செய்யப்போவதில்லை என உறுதிபட கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவராக யார் வர வேண்டும் என்பதை, நான் தீர்மானிக்க மாட்டேன் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
புதிய தலைவரரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சியிடம் தான் ஒப்படைப்பேன். தாம் அந்த பணியில் ஈடுபட்டால் நிச்சயம் அது பிரச்சனைக்குரியதும், விமர்சனத்திற்குரியதும் ஆகி விடும். எனவே காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைரை தேர்வு செய்யும் எவ்வித பொறுப்புகளையும், தாம் எடுத்து கொள்ளப் போவதில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.