ராகுலை சர்ச்சையில் சிக்க வைக்கும் காங்.ஐ.டி. நிர்வாகிகள்..! காரணம் என்ன?
டெல்லி: மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார் ராகுல். ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஐடி விங் செய்யும் குழப்பத்தால் ராகுல் காந்திக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
ராகுல் விலகலால் அக்கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ராகுல் தனது ட்வீட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் என்ற சொற்களை அகற்றிவிட்டு மக்களவை உறுப்பினர் என்று மட்டும் தான் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ராகுல் காங்கிரஸ் தலைவர் என உள்ளது. ராகுல் பெயரை தலைவர் பதவியில் இருந்து நீக்க காங்கிரஸ் ஐ.டி.பிரிவு நிர்வாகிகளுக்கு மனம் வரவில்லையா அல்லது கவனக்குறைவாக இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
ஆனால் இதை வைத்தே பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் ராகுலை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். ஏற்கனவே ராகுலை ராஜினாமா நாடகம் ஆடுவதாக பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில், இது மேலும் விமர்சனம் செய்ய அவர்களுக்கு வசதியாகிவிட்டது.
மேலும், சில நிர்வாகிகளின் பதவியும் மாற்றப்படாமலே உள்ளது. பாஜக இணையதள பக்கத்தில் நாளுக்கு நாள் புது புது தரவுகளை பதிவிட்டும், நீக்கியும் வரும் நிலையில் காங்கிரஸ் இப்படி தூங்கலாமா?