எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்.. ஆம் ஆத்மி புறக்கணிப்பு
டெல்லி: பெகாசஸ் பிரச்சனை மற்றும் விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றால் நாடாளுமன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காலை உணவு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதில், எதிர்க்கட்சிகள் இணைந்து, நிழல் நாடாளுமன்றம் பாணியில் கூட்டத் தொடர் நடத்துவது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐ.யு.எம்.எல், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரளா காங்கிரஸ் (எம்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டு கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், லோக்தந்திரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகள் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வியூகக் கூட்டங்களில் அதிலும், குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டங்களில் ஆம் ஆத்மி எப்போதும் விலகியே இருந்து வருகிறது. அதேநேரம், கடந்த காலத்தைப் போலல்லாமல், காங்கிரஸ் சற்று இறங்கி வந்து, இந்த கூட்டத்திற்கு ஆம் ஆத்மிக்கும் சேர்த்துதான் அழைப்புவிடுத்தது. ஆனாலும் ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை.
இந்த பிரேக் ஃபாஸ்ட் ஆலோசனையின்போது, உரையாற்றிய ராகுல் காந்தி "இந்த சக்தியை நாம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று. இந்த மக்கள் குரல் எவ்வளவு அதிகமாக ஒன்றிணைகிறதோ, அந்த குரல் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும், பிஜேபி-ஆர்எஸ்எஸ்சுக்கு அதை அடக்குவது மிகவும் கடினமாகிவிடும்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 அன்று தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களில் 107 மணிநேரங்களில் பாராளுமன்றம் 18 மணிநேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. தடைகள் காரணமாக ரூ.133 கோடி வீணாகத்தான் செலவாகியுள்ளது.
பெகாசஸ் விவகாரம் - ராகுல் தலைமையில் எதிர்கட்சியினர் ஆலோசனை... போட்டி நாடாளுமன்றம் நடக்குமா
இதனிடையே, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் மல்லிகார்ஜுன் கார்கேவை நேற்று அழைத்து ஆதரவு தர கோரினார்.
பெகாசஸ் வேவு விவகாரம் மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், நீதிபதிகள், ஆர்வலர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் காரணமாக எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.