வருத்தப்பட்டு எழுதிய பாரிக்கர்.. லெட்டரை லீக் செய்தது தப்பு சார்.. ராகுல் பதிலடி
மனோகர் பாரிக்கருக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்து கடிதம் எழுதி உள்ளார்.
Recommended Video
டெல்லி: "உடல் சரியில்லாத காரணத்தினால்தான் உங்களை வந்து சந்தித்தேன், வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை" என்றும் மனோகர் பாரிக்கருக்கு ராகுல்காந்தி விளக்கம் தெரிவித்து பதில் கடிதம் எழுதி உள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கும் தொடர்பு உள்ளதாகவும், இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் அவரிடம்தான் இருக்கின்றன என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில் பாரிக்கருக்கு உடல்நலம் சரியில்லாமல்போனது. சமீபத்தில் விடுமுறையை கழிக்க கோவா சென்ற ராகுல்காந்தி, பாரிக்கரை நேரில் போய் சந்தித்து விட்டு வந்தார். பின்னர், டெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றில், "ரஃபேல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற முறையில் பிரதமர் மோடி என்னிடம் எதுவுமே சொல்லவில்லை" என்று பாரிக்கர் கூறியதாக ராகுல் காந்தி கூறினார்.
பிளவு ஏற்படுத்துகிறார்
அத்துடன், அனில் அம்பானிக்காக பிரதமர் செய்த தவறும் வெளி உலகத்துக்கு வந்துவிட்டது என்றும் ராகுல் கூறியிருந்தார். ராகுலின் இந்த பேச்சு பாஜக தலைவர்களிடயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமருக்கும் பாரிக்கருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் ராகுல் இறங்கி இருக்கிறார் என்று கூறப்பட்டது.
அரசியல் காரணம்
இதனால் பாரிக்கர் இது சம்பந்தமாக 2 பக்கத்திற்கு ஒரு கடிதத்தை ராகுல் காந்திக்கு எழுதினார். அதில், "என்னை சந்தித்த நேரமே வெறும் 5 நிமிடங்கள்தான். உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அதை பற்றி விசாரிக்கதான் வந்திருப்பதாக நான் நினைத்தேன். நாம் பேசிய அந்த 5 நிமிடத்திலும் ரஃபேல் தொடர்பாக எதுவுமே இருவரும் பேசவில்லை, ஆனால் இப்படி அரசியல் காரணம் இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறேன்.
விளக்க கடிதம்
மக்களுக்கு சேவை செய்வதற்காக, வாழ்த்து தெரிவிக்கவே நீங்கள் என்னை சந்திப்பதாக நினைத்தேன். வேறு உள்நோக்கம் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது" என்று எழுதினார். பாரிக்கரின் இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுலுக்கு இது தேவையா என்பது போலவும், அவரது பெயருக்கு அவப்பெயர் தேடி தந்துவிட்டது போலவும் காங்கிரசார் தரப்பில் வருத்தப்பட்டனர். எனவே பாரிக்கரின் கடிதத்திற்கு ராகுல்காந்தி மற்றொரு கடிதம் எழுதியிருக்கிறார்.
2 முறை மக்கள் சந்திப்பு
அதில் "உடல்நலம் சரியில்லாததால்தான் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தேன், அந்த சந்திப்பு முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையிலான சந்திப்புதான். அந்த சந்திப்புக்கு பிறகு 2 முறை பொதுக்கூட்டத்தில் மக்களுடன் பேசியிருக்கிறேன். அப்போது பாரிக்கர் ஏற்கனவே ரஃபேல் தொடர்பாக கூறிய கருத்துக்களைத்தான் மக்கள் முன்பு சொன்னேனே தவிர, நமது சந்திப்பு குறித்து நான் எந்த தகவலையும் பொதுவெளியில் பகிரவில்லை " என்று ராகுல் அந்த கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ஊழல் கறை
நீங்கள் எழுதியதாக வெளியான கடிதத்தில் கூறப்பட்டது குறித்து அறிந்து வருத்தமுற்றேன். நான் அதைப் படிப்பதற்கு முன்பே அது பிரஸ்ஸுக்கு லீக் ஆனது வருத்தம்தான். நான் ஒரு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இந்த நாட்டின் ஊழல் கறை படிந்த பிரதமருக்கு எதிராக போராட எனக்கு முழு உரிமை உண்டு. ரபேல் பேரம் தொடர்பாக மக்களுக்கு உண்மைகளைத் தெரிவிக்கும் கடமையும் எனக்கு உண்டு.
எதுவும் தெரியாது
ஆனால் எனது சந்திப்பின்போது நான் அதுதொடர்பாக உங்களிடம் பேசவும் இல்லை. எதையும் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. நாம் சந்தித்தபோது பேசிய 2 பேச்சுக்கள் குறித்தும் நான் பொது வெளியிலேயே சொல்லி விட்டேன். அதைத் தாண்டி எதுவும் இல்லை. உண்மையில் 2015ம் ஆண்டு நீங்கள் கோவாவில் மீன் மார்க்கெட்டைத் தொடங்கி வைத்த சமயத்தில்தான் பிரதமர் ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்சில் அறிவித்தார். அப்போது பிரதமர் அறிவித்த புதிய ரபேல் திட்டம் குறித்து எனக்கு தெரியாது என்று ஊடகங்களிடம் கூறினீர்கள். இது பதிவான ஒன்று.
அனுதாபப்படுகிறேன்
உங்களது படுக்கை அறையில் ரபேல் தொடர்பான ஆவணங்களை வைத்திருப்பதாக கோவாவைச் சேர்ந்த ஒரு அமைச்சரிடம் நீங்கள் கூறி ஆடியோ பதிவும் வெளியானது. அதுவும் உண்மை. உங்களது நிலையைக் கண்டு நான் அனுதாபப்படுகிறேன். உங்களை நான் சந்தித்த பிறகு உங்களுக்கு மிகப் பெரிய அழுத்தம் கொடுக்கப்படுவதை நான் அறிவேன். பிரதமர் மீது நீங்கள் இன்னும் அதிக விசுவாசத்தை வெளிக்காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தமும் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. என்னை மேலும் விமர்சிக்க அழுத்தம் கொடுக்கப்படுவதையும் உணர்கிறேன்.
லீக் செய்து விட்டீர்கள்
வழக்கமாக இதுபோன்ற விஷயங்களில் நான் அமைதியாக இருப்பேன். ஆனால் நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தை லீக் செய்து விட்டீர்கள். அதுதான் என்னை விளக்கம் தர தூண்டியது. நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும். மீண்டும் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அன்புடன் ராகுல் காந்தி.