3வது அணிக்கு ஆள் சேர்க்கும் சந்திரசேகர ராவ்.. திடீரென ராகுலை சந்தித்த நாயுடு.. காரணம் என்ன?
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தேசிய அரசியலில் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி உள்ள நிலையில் 3-ஆவது அணியை ஏற்படுத்துவது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். காங்கிரஸ் கூட்டணியின் நோக்கம் பாஜக இல்லாத அரசு என்பதாகும்.
ஆனால் 3-ஆவது அணிக்கு வித்திடும் சந்திரசேகர ராவின் கொள்கை, பாஜக- காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதாகும். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சந்திரசேகர ராவ் இது தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
கலகலக்கும் பாமக.. அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்.. அமமுகவில் வந்து குவிகின்றனர்!
கவனம்
இதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து பேசினார். இதன் பின்னர் இந்த பேச்சு சற்று அடங்கியிருந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.
ஆட்சி அமைக்க முடியும்
தற்போது மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரவுள்ளதால் 3-ஆவது அணி அமைக்க சந்திரசேகர ராவ் முனைப்பு காட்டி வருகிறார். 3-ஆவது அணியால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.
ஸ்டாலின் மறுப்பு
இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். மேலும் மு.க.ஸ்டாலினையும் ராவ் சந்திக்க விரும்பியதாகவும் தான் பிரசாரத்தில் உள்ளதால் இந்த சந்திப்புக்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் ஆந்திர முதல்வர்
அது மட்டுமல்லாமல் சந்திரசேகர ராவ் கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
3-ஆவது அணி அமையக் கூடாது
அப்போது மூன்றாவது அணி அமையக் கூடாது என்பதில் ராகுல் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூன்றாவது அணி அமையக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் செய்ய வேண்டியவை குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு கைக் கொடுக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.