டாவோஸ் உரையை திடீரென நிறுத்திய மோடி.. "பொய்யா பேசுனா இப்படித்தான்.." ராகுல் காந்தி கடும் விமர்சனம்
டெல்லி: உலகப் பொருளாதார மன்றத்தின் டோவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி டெலிபிராம்ப்ட்டரை பார்த்து வாசித்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சற்று தடுமாறினார். இதனை முன்வைத்து பிரதமர் மோடியை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பிரதமர் மோடி பொதுவாக டெலிபிராம்ப்ட்டரை பார்த்து வாசித்தாலும் அவரது உரை இயல்பானதாக இருக்கும். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாடு நேற்று நடைபெற்றது.
பாஜக மிரட்டறாங்க.. மோடி பெயரை சொல்லவே இல்லையே.. ஏன் குறுகுறுங்குது.. சிபிஎம் பாலகிருஷ்ணன் நறுக்
டெலிபிராம்ப்ட்டர் கோளாறு
இம்மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது திடீரென மோடி பார்த்து வாசித்துக் கொண்டிருந்த டெலிபிராம்ப்ட்டர் வேலை செய்யவில்லை. இதனால் சற்று தடுமாறியபடியே பேச்சை சில வினாடிகள் நிறுத்தினார் மோடி. பின்னர் இயர் போன் மூலம் எதிர்முனையில் கேட்டு சரிசெய்து கொண்டு உரையைத் தொடர்ந்தார்.
இந்தியாவில் முதலீடு
பிரதமர் மோடி தமது உரையில், இந்தியா உலகின் 3-வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது. கொரோனா தொற்று காலங்களில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பல நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கி கோடிக்கணக்கான உயிர்களை இந்தியா காப்பாற்றியது. இந்தியா உலகின் மிகப்பெரிய, பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான டிஜிட்டல் பேமெண்ட் தளத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம் என்று குறிப்பிட்டார்.
சமூக வலைதள பேசுபொருள்
பிரதமர் மோடி டெலிபிராம்ப்ட்டரை பார்த்து படித்த போது டெக்னிக்கல் கோளாறு ஏற்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ட்விட்டரில் இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் நம்பர் 1 ஆனது. ஒருசில தரப்பு பிரதமர் மோடியை விமர்சித்தும் வருகிறது.
ராகுல் அட்டாக்
பிரதமர் மோடி தடுமாறும் வீடியோ ட்விட்டர் பதிவுகளை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும், பிரதமர் மோடியின் பொய்களை டெலிபிராம்ப்ட்டர் கூட ஏற்கவில்லை. பிரதமர் மோடியால் சொந்தமாக பேச முடியாது. யாரோ இயக்குகிற டெலிபிராம்ப்ட்டரைப் பார்த்துதான் பிரதமர் மோடியால் பேச முடியும் எனவும் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.