ராகுல் காந்தி அப்படியே அவுங்க அப்பா மாதிரி.. ராஜிவ் காந்தியின் சர்ச்சை சுற்றுலாக்கள்- ரீவைண்ட்
டெல்லி: காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இத்தாலிக்கு கிளம்பி சென்றதுமே மறுபடியும் சர்ச்சைகள் வெடித்துள்ளன. விவசாயிகள் போராட்டம் நடக்கிறது, காங்கிரஸ் நிறுவனர் தினம் இருக்கிறது.. ஆனால் எதைப் பற்றியும் ராகுல் காந்தி கவலைப்படவில்லையே என்கிறது ஒரு தரப்பு.
புதிதாக காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள சிவசேனாவும் இதை விமர்சனம் செய்துள்ளது. ஆனால், ராகுல் காந்தி எந்த மரபில் இருந்து வந்தவர் என்பதை நன்கு அறிந்தவர்களுக்கு இது ஒரு வியப்புக்குரிய விஷயமாகவே தோன்றாது.
ராகுல் காந்தியின் இந்த பழக்கம், அவரது தந்தை ராஜிவ் காந்தியிடமிருந்து வந்தது. ரத்தத்தில் ஊறியது. குழந்தை பருவம் முதலே, அருகே இருந்து பார்த்து கற்றுக் கொண்டது.
இப்போது ராகுலின் விடுமுறை தினங்கள் எப்படி விமர்சனம் செய்யப்படுகிறதே அதைவிட அதிகமாக, ராஜீவ் காந்தியின் விடுமுறை நாட்களும், வெளிநாட்டுப் பயணங்களும் கண்காணிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டன. ராஜீவ் ஆட்சியில் இருந்தபோது, அவரது வாழ்க்கை முறை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.
வடிவமைப்பான காலணிகள், நவீன கார்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மீதான அவரது மோகம் எப்போதும் விவாதத்தை ஏற்படுத்தி வந்தது.
காரை தானே ஓட்டிய பிரதமர் ராஜீவ் காந்தி
ஜோர்டானின் மன்னர் ஹுசைன் 1986ம் ஆண்டு ராஜிவ் காந்திக்கு புல்லட் துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசளித்தார். ஏனெனில் அதற்கு சமீபத்தில்தான் ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய நடந்த ஒரு முயற்சி முறியடிக்கப்பட்டு தப்பியிருந்தார். அதேநேரம், ராஜீவ் காரை தானே ஓட்டிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அமெரிக்காவின் ஜீப் நிறுவனத்தின் வாகனத்தை அவரே பணிகளுக்கும், டெல்லியை ஒட்டிய பண்ணை வீட்டுக்கும் ஓட்டிச் செல்வார். டெல்லியில் ஒரு பிரதமர் கார் ஓட்டியது அதுவே முதல் முறை.
ராகுல் காந்தி மீது விமர்சனம்
தனது தந்தையைப் போலவே, ராகுலும் வெவ்வேறு காரணங்களுக்காக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது தற்போதைய இத்தாலி சுற்றுப்பயணம் சமூக ஊடக தளங்களில் விமர்சனங்களால் நிரம்பி வழிகிறது. அவர் தனது தாய்வழி பாட்டி பவுலா ப்ரெடெபனின் உடல்நிலை விசாரிக்க சென்றுள்ளார். இது மனித உறவுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவமாகவும் பார்க்கலாம்.
மோடி, அமித்ஷாவுக்கு ஓய்வு இல்லை
பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், கிட்டத்தட்ட 24 மணி நேரமும் அரசுப் பணியில் இருக்கிறார்கள். எனவே ராகுலின் செயல்பாடு பாார்ப்போருக்கு வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் இல்லையே. பாஜகவின் மூத்த தலைவரான, மறைந்த, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் விடுமுறை நாட்களைத் தேர்ந்தெடுத்து ஓய்வு எடுத்துள்ளது வரலாறு.
விடுமுறை யாருக்கு பிடிக்காது?
மோடி-ஷா ஓய்வு எடுக்காமல் பணியாற்றலாம். ஆனால், வேலைக்கும்-ஓய்வுக்கும் இடையிலான வேறுபாடு எப்போதும் இந்திய மத்தியதர வர்க்கத்திற்கும் எலைட் வகுப்பிற்கும் மிகவும் பிடித்த விஷயம். ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் தனக்கு விடுமுறை பிடிக்காது என்று மனசாட்சிக்கு கட்டுப்பட்டு கூறிவிட முடியுமா? ஆனால், நடுத்தர வர்க்கம்தான், ராகுலின் விடுமுறையை அதிகமாக விமர்சனம் செய்வதை பார்க்க முடிகிறது. ராகுலின் இந்த பழக்கம் அவரது தந்தையின் 'ஹேபிட்' என்பது அனுபவஸ்தர்களுக்கு தெரியும்.
வரிசையான சுற்றுலா
பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவராக இருந்தாலும், (1984-89 காலகட்டம்), ராஜீவ் காந்தி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை தவறாமல் கொண்டாடினார். 1985ல் கன்ஹா தேசிய பூங்கா (மத்தியப் பிரதேசம்), 1986இல் ரந்தம்பூர் (ராஜஸ்தான்) சென்றிருந்தார். 1987 ஆம் ஆண்டில், ராஜீவ்-சோனியா மற்றும் அவரது நண்பர்கள் அந்தமானிலும், 1988ல் லட்சத்தீவிலும் விடுமுறையை சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் எடுத்தல், வனவிலங்கு ஆகியவை மட்டுமின்றி, குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில் ராஜீவ் காந்தி ரொம்பவே ஆர்வம் கொண்டிருந்தார்.
9 வாரங்கள்தான்
1984ம் ஆண்டு லோக்சபாத் தேர்தலில் வெற்றிபெற்று வெறும் ஒன்பது வாரங்களில், பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கன்ஹா தேசிய பூங்காவில் விடுமுறை கழித்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஒரு வருடம் கழித்து அவர் ரந்தம்பூர் தேசிய வனவிலங்கு பூங்காவில் இருந்தார். அங்கு புத்தாண்டில் 6 நாட்களை அவர் கழித்தார். பூங்காவில் பொது நுழைவு மூடப்பட்டது. ராஜீவ் மற்றும் அவருடன் சென்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இவருக்காக, திறந்த மைதானத்தில் ஒரு ஹெலிபேட் கட்டப்பட்டது.
கூட்டத்தோடு கொண்டாட்டம்
விடுமுறை நாட்களில் மனைவி சோனியா காந்தி மற்றும் குழந்தைகள் ராகுல்-பிரியங்கா உட்பட 23 பேர் கொண்ட குழுவுடன் அவர் விடுமுறையை அங்கு கொண்டாடி மகிழ்ந்தார். சோனியாவின் பெற்றோர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 8 உறவினர்கள், பிரிஜேந்திர சிங் மற்றும் குடும்பத்தினர், அமிதாப் பச்சன், அவர் மனைவி ஜெயா மற்றும் இரண்டு குழந்தைகளும் குழுவில் இருந்தனர். ராஜீவ் மிகவும் உற்சாகமாக இருந்தார், அங்கு சென்ற அரை மணி நேரத்தில் ராஜிவ் ஜீப் சவாரி செய்தார். ரூ .4,500 க்கும் அதிகமான கட்டணத்தை பிரதமர் என்ற முறையில் இல்லாமல், தனிப்பட்ட முறையில் செலுத்தினார். ராஜீவ் சமையல்காரர்களுக்கும் பிற உதவியாளர்களுக்கும் டிப்சாக ரூ .2,000 கொடுத்தார்.
ஏழை நாடு
மில்லியன் கணக்கான ஏழைகள் வாழும் ஒரு நாட்டில், அதன் பிரதமர் ஆடம்பரமாக விடுமுறையை கொண்டாடுவதை, அப்போது, மக்களில் சிலர் ஆச்சரியமாகவும், பலர் எரிச்சலோடும் பார்த்தனர். 1988 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தபோது, ராஜீவ் காந்தி லட்சத் தீவில் விடுப்பில் இருந்தார். ராஜீவ் இப்படி ஜாலியாக குடும்பத்தோடு விடுமுறைக்கு செல்வது இந்திய அரசியலில் ஒரு புதிய நிகழ்வு. அவருக்கு முன்னாள் பிரதமர்களாக இருந்த ஜவஹர்லால் நேரு தனித்து வாழ்ந்தவர். இந்திரா காந்தியும் அப்படித்தான். லால் பகதூர் சாஸ்திரியின் பதவிக்காலம் மிகவும் குறுகியதாக இருந்தது.
அரசியல் வரலாறு
ராஜீவ் காந்தி சகாப்தத்திற்குப் பிறகும், பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் மனைவி இல்லாதவர். வாஜ்பாய் திருமணமாகாதவர். வி.பி. சிங், சந்திரசேகர், எச்.டி.தேவேகவுடா மற்றும் ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் மிகக் குறுகிய காலத்திற்கு பிரதமர் பதவியில் இருந்தனர். மேலும் அந்த நேரங்களும் போர்களுக்கு இடையில் கடந்துவிட்டன. எனவே ராஜிவ் காந்தி பிரதமராக பதவி வகித்த காலத்திற்கு பிறகும் அதுபோன்ற குடுபத்துடனான ஜாலி டிரிப்களை இந்திய அரசியல் பார்க்கவில்லை. ஆனால், தனது தந்தையின் பாரம்பரியத்தை ராகுல் காந்தி காப்பாற்றி வருகிறார் என்றுதான் இதை கடந்து செல்ல வேண்டியுள்ளது.