ஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பணம் கொடுத்து, நாளிதழில், செய்தி வெளியிட்டதாக கூறி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் பாஜக மீடியா பொறுப்பாளர் அணில் பலுனி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் வழங்கியுள்ள ஒரு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ஹைதராபாத்திலிருந்து வெளியாகக் கூடிய ஒரு ஆங்கில நாளிதழில் கடந்த வியாழக்கிழமை, ராகுல்காந்தியின் சிறப்பு பேட்டி வெளியாகி உள்ளது. இது பணம் கொடுத்து வெளியிடப்பட்ட ஒரு செய்தி. தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக, வாக்காளர்களை குழப்பக் கூடிய வகையிலான செய்திகளை பணம் கொடுத்து விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டசபை வாக்குபதிவு நடைபெறுவதற்கு, ஒரு நாளைக்கு முன்பாக, இந்தப் பேட்டி வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியின் இந்த செயல், தேர்தல் விதிமுறை மீறலாகும். எனவே, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.