நில அதிர்வு.. அறை குலுங்கினாலும் அசராமல் நேரலையில் பேசிய ராகுல் காந்தி
டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காணொலி மூலம் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய போது நில அதிர்வு ஏற்பட்டது.
தஜிகிஸ்தானை மையமாகக் கொண்டு நேற்று (பிப்.12) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆக இது பதிவானது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர்-பக்துன்கவா, பஞ்சாப் மாகாணங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டது.
அதுமட்டுமின்றி, டெல்லி, டெல்லி என்சிஆர், வடமாநிலங்களிலும் சில வினாடிகளுக்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பதறிய மக்கள், வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால், இதுவரை வடமாநிலங்களில் நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்துத் தகவல் ஏதும் பதிவாகவில்லை.
குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காணொலி மூலம் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது அறை முழுவதும் குலுங்கியது.
கொஞ்சமும் பதட்டப்படாத ராகுல், 'இங்கே நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்' என கேஷுவலாக சொல்லிவிட்டு மீண்டும் தனது உரையாடலைத் தொடங்கினார்.
நில அதிர்வு தொடர்ந்து நீடிக்க, 'எனது அறை அதிர்கிறது' என்று கலந்துரையாடிய மாணவர்களிடம் ராகுல் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.