எம்பிக்கள் நீக்கம்... ஜனநாயகத்தின் மீது அடக்குமுறை தொடர்கிறது.... ராகுல் காந்தி கண்டனம்!!
டெல்லி: நாட்டில் தொடர்ந்து ஜனநாயகத்தின் மீது அடக்குமுறை நடந்து வருகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு இருப்பதை கண்டித்து ராகுல் காந்தி ட்விட்டரில் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ''இந்தியாவில் ஜனநாயகத்தை அடக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் பேச விடாமல் அடக்கப்பட்டனர். பின்னர் எம்பிக்களை அவையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளனர். விவசாயிகளின் கவலை தரும் விஷயங்களில் மத்திய அரசு கண்களை மூடிக் கொண்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்திருப்பது கருப்பு வேளாண் சட்டம்.
இந்த அரசாங்கத்தின் ஆணவத்தால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பேரழிவை சந்தித்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்ய சபையில் நேற்று வேளாண் மசோதா தாக்கல் செய்தபோது விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டதாக, திரிணமூல் காங்கிரஸ் டெரிக் ஓ ப்ரையன் மற்றும் டோலா சென், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சதாவ், ரிபுன் போரா மற்றும் நசீர் ஹூசைன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளமாறன் கரீம் மற்றும் கே.கே. ராகேஷ் ஆகியோர் தற்காலிகமாக அவையில் இருந்து இன்று நீக்கம் செய்யப்பட்டனர்.
ஒரு வார காலம் இவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாத வகையில் இந்த தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று காலை ராஜ்ய சபைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
ராஜ்ய சபையில் நேற்று வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி வேணுகோபால் அளித்திருந்த பேட்டியில், '' அவையில் கலந்துரையாடாமல், இந்த மசோதாவை துணைத்தலைவர் நிறைவேற்றியுள்ளார். இதுபோன்ற ஒரு நடைமுறையை நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை. உறுப்பினர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
நேற்று ராஜ்யசபையில் விதிமுறை தொடர்பான புத்தகம் மற்றும் வேளாண் மசோதாவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்தது குறித்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று பேசுகையில், ''நேற்று ராஜ்ய சபையில் நடந்த நடவடிக்கைகள் வலி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. நடைமுறை மீறப்பட்டுள்ளது. ராஜ்ய சபாவுக்கு இது மிகவும் மோசமான நாள்.
தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்?
துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கை தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஓ ப்ரையன் நீங்கள் அவையை விட்டு வெளியேறுங்கள்'' என்றார். ஆனால், அவையில் இருந்து உறுப்பினர்கள் வெளியேறாத காரணத்தினால், இன்று முழுவதும் அவையை ஒத்தி வைத்தார்.