ரூ 500 திருடியதாக தலித்துகளின் ஆசனவாயில் ஸ்குரூ டிரைவரை விட்ட கொடூரம்.. அதிர்ச்சி.. ராகுல் ட்வீட்
டெல்லி: ரூ 500 திருடியதாக ராஜஸ்தான் மாநிலத்தில் இரு தலித்துகளின் ஆசனவாயில் ஸ்குரூ டிரைவரை விட்டது அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.
நாகவுர் மாவட்டம், கர்னவ் நகரில் உள்ள இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ 50 திருடியதாக கூறி தலித் சமூகத்தை சேர்ந்த இருவரை ஊழியர்கள் பிடித்து விசாரித்தனர்.
அதிர்ச்சி
அப்போது அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி அந்த ஊழியர்கள் இருவரையும் தொல்லை செய்தனர். பின்னர் இருவரின் ஆடைகளையும் கழற்றி ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். மேலும் ஸ்கூரு டிரைவரை பெட்ரோலில் நனைத்து அவர்களது ஆசனவாயில் விட்டு குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படியும் டார்ச்சர் செய்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி
வெறும் ரூ 500 காணாமல் போனதற்கு இத்தகைய தண்டனையா என பெரும்பாலானோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ இணையத்தில் வெளியானது. இதையடுத்து ஊழியர்கள் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
|
ராகுல் காந்தி ட்வீட்
அவர் கூறுகையில், ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் இரு தலித் இளைஞர்கள் மிகக் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ மிகவும் கொடூரமானது, அருவருக்கத்தக்கது. இது போல் அதிர்ச்சியளிக்கும் குற்றத்தை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை கேட்டுக் கொண்டார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது என்றும் இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என பாஜக கேள்வி கேட்கின்றனர்.
குற்றங்கள் அதிகரிப்பு
இதுகுறித்து அமித் மாளவியா தனது ட்விட்டரில் கூறுகையில் மாநில அரசா? அந்த மாநிலத்தில் முதல்வரே உள்துறை அமைச்சருமாவார். அவர் பெயர் அசோக் கெலாட். அது உங்களுக்கு தெரியாது என்றே வைத்துக் கொள்வோம், இப்போது சொல்லுங்கள் மாநிலத்தில் தலித்துகளுக்கு எதிரான கொடூரத்திற்கு யார் பொறுப்பு? ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு தலித்துகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன என மாளவியா தெரிவித்துள்ளார்.