மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து- ராகுல் வாக்குறுதி
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக அத்துணை கட்சிகளும் தீயாய் வேலை செய்து வருகின்றன. அதில் காங்கிரஸ் ஒரு படி மேலே போய் தேர்தல் வாக்குறுதிகளையும் அவ்வப்போது அறிவித்து வருகிறது.
இந் நிலையில் டெல்லியில் மாணவர்களிடையே ராகுல் காந்தி நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது ராகுல் கூறுகையில் ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்டோர் தீவிரவாத தாக்குதலில் தங்கள் இன்னுயிர்களை இழக்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு உரிய ஆதரவும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இது வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வீரமரணமடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
ஜம்மு- காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் பலியான சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் 40 பேருக்கும் தியாகி அந்தஸ்து அளிக்கப்படவில்லை என ஆதங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.