ரபேல் ஒப்பந்தம்: என்ன பேச்சு பேசுனீங்க.. மன்னிப்பு கேளுங்க.. ராகுல் காந்திக்கு பாஜக கிடுக்கிப்பிடி
டெல்லி: ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது பொய் குற்றச்சாட்டை சுமத்திய, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் லஞ்சம் கைமாறி உள்ளதாக ராகுல்காந்தி நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து தரப்பிடுமும், விசாரணை முடிந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்ட விவகாரத்தில், முடிவுகள் அனைத்தும் முறையாக எடுக்கப்பட்டுள்ளது என்றும், அதில் முறைகேடு நடந்துள்ளதாக எந்த ஒரு சந்தேகமும், முகாந்திரமும் கிடையாது என்றும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்து மனுக்கள் அனைத்தையும், தள்ளுபடி செய்துவிட்டது.
காங்கிரசுக்கு பின்னடைவு
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேர்தல் பிரச்சார யுக்தியாக, ரஃபேல் போர் விமான கொள்முதலை காங்கிரஸ் பயன்படுத்தி வந்தது. வரும் லோக்சபா தேர்தலிலும் இந்த பிரச்சாரம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி மன்னிப்பு
இதனிடையே செய்தியாளர்களிடம் இன்று பேசிய, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசைன், காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல்காந்தியும் தங்களது குற்றச்சாட்டுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஊழல் பாரம்பரியம்
மேலும் அவர் கூறுகையில், தேசத்தின் பாதுகாப்பு விவகாரங்களில் நடைபெறும் ஒப்பந்தங்களில் பணத்தை தோண்டி எடுத்து ஆதாயம் பார்ப்பது என்பது காங்கிரஸ் கட்சி உயர்மட்ட தலைவர்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகும்.
பகிரங்க மன்னிப்பு
எனவேதான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தங்களைப் போலவே பிரதமர் நரேந்திர மோடியையும் நினைத்துக் கொண்டுள்ளனர். ஊழலற்ற ஆட்சியை நிர்வகித்து வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம், காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.