மோடியும், அனில் அம்பானியும் ஒரு போதும் தப்ப முடியாது.. ராகுல் காந்தி ஆவேசம்
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்றம் ரபேல் விவகாரம் கொடுத்திருக்கும் தீர்ப்பு ஆச்சரியமாக உள்ளது. நிச்சயம் ஒரு நாள் விசாரணை நடைபெறத்தான் போகிறது. அதுவரை நாங்களும் ஓய மாட்டோம். அப்போது நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் நாட்டு மக்களிடம் அம்பலப்படுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் பெரும் இறுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக தரப்பு கொண்டாடி வருகிறது. இதை வைத்து நேற்று பாஜக எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலும் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டார். பேட்டியின்போது ராகுல் காந்தி கூறியதிலிருந்து:
திருடனேதான்
நாட்டின் காவலன் திருடன்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் என்னிடம் இல்லை. பிரதமர் மோடி இப்போது ஓடி ஒளியலாம். ஆனால் ஒருபோதும் அவரைக் காப்பாற்றவே முடியாது. நிச்சயம் ஒரு நாள் விசாரணை வரும். நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் அன்று அம்பலப்படுவார்கள்.
விசாரித்த அறிக்கை எங்கே
சிஏஜியின் கணக்கு தணிக்கை அறிக்கையை பொதுக் கணக்குக் குழு பார்த்திருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது வியப்பளிக்கிறது. பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே. அவருக்கே அந்த அறிக்கையைக் காட்டவில்லை. எங்கே போனது சிஏஜியின் அறிக்கை. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் கணக்கில் எடுத்திருக்க வேண்டும்.
அடிப்படையிலேயே தவறு
சிஏஜி அறிக்கையை அடிப்படையாக வைத்தே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையை பொதுக் கணக்குக் குழு தலைவருக்குக் கூட காட்டவில்லை. ஆனால் கோர்ட் அதைப் பார்த்துள்ளது, படித்துள்ளது. அப்படியானால் அந்த சிஏஜி அறிக்கை எங்கே போனது? எங்களுக்குக் காட்டுங்கள்.
அந்த நாடாளுமன்றம் போயிருச்சா
ஒரு வேளை பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு அது போய் விட்டதா. அங்கு தாக்கல் செய்யப்பட்டு விட்டதா. அல்லது பிரதமர் அலுவலகம் தனக்கென தனியாக ஒரு பொதுக் கணக்குக் குழுவை வைத்துள்ளதா. அவர் செய்தாலும் செய்யலாம். நாட்டின் அனைத்து முக்கிய அமைப்புகளையும் சீர்குலைத்தவர் ஆயிற்றே என்றார் ராகுல் காந்தி.
மக்கள் அறிவார்கள்
5 மாநில சட்டசபைத் தேர்தல் குறித்த கேள்விக்கு ராகுல் பதிலளிக்கையில், நாங்கள் ஆட்சியமைத்துள்ள மாநில விவசாயிகளுக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களது கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இந்தத் திருடர்கள் உங்களது பணத்தை திருடி விட்டனர். இந்த நாட்டின் காவலனே திருடன் என்று கூறினார் ராகுல் காந்தி.