கடன் விவகாரம்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்திடம் டியூசன் போக வேண்டும்.. பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: கடன் நீக்க விவகாரத்திற்கும், கடன் தள்ளுபடிக்கும் உள்ள வித்தியாசம் குறித்து அறிந்து கொள்ள ராகுல் காந்தி ப சிதம்பரத்திடம் டியூசன் செல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்துள்ளார்.
தொழில்அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடனை வாராக்கடனாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடன் தள்ளுபடி பெற்ற பலரும் பாஜகவின் நண்பர்கள் என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், "கடன் நீக்க விவகாரத்திற்கும், கடன் தள்ளுபடிக்கும் உள்ள வித்தியாசம் குறித்து அறிந்த கொள்ள ராகுல் காந்தி ப சிதம்பரத்திடம் டியூசன் செல்ல வேண்டும்.
கொரோனா உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பது தவறானது- ராகுல் காட்டம்
பாஜக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. கணக்கியல் நடைமுறைக்காக கடன் கணக்குகள் நீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இது வழக்கமான நடைமுறை. அதேநேரம் கடன் மோசடி நபர்கள் மீதான கடன் தொகை மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படாது" பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 68000 கோடி கடன் தள்ளுபடி என்பது நடைமுறைகளின் படி கணக்கியல் ரீதியாக நீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இது அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்கும் நடமுறையை கைவிடுவதாக அர்த்தம் இல்லை" என்றார்.