என்ன நடந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்... அசாமில் ராகுல் காந்தி அதிரடி
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் என்று அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.
அசாம் மாநிலத்தில் மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் இம்முறை களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, அசாம் மாநிலத்தில் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
அமல்படுத்த மாட்டோம்
அசாம் மாநிலத்தின் சிவசாகரில் உள்ள போர்டிங் பிளிட் என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், "இந்தியர்களைப் பிளவுபடுத்த பாஜக கொண்டு வந்துள்ள சூழ்ச்சி தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது ஒருபோதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது. சட்டவிரோத குடியேற்றம் என்பது இங்கு ஒரு பிரச்சினை தான், ஆனால் அசாம் மக்களுக்குப் பேச்சுவார்த்தை மூலம் இந்த சிக்கலைத் தீர்க்கும் திறன் உள்ளது" என்றார்.
தேயிலை தொழிலாளர்கள் ஊதியம்
குஜராத் தொழிலதிபர்களின் நலனிற்காக அசாம் மாநிலத்திலுள்ள தேயிலை தொழிலாளர்களை பாஜக அரசு தொடர்ந்து சுரண்டி வருவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேயிலை தொழிலாளர்களின் தினசரி ஊதியம் ரூபாய் 167இல் இருந்து 365 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நான்கு பேர்
ஒட்டுமொத்த இந்தியாவை தற்போது நான்கு பேர் மட்டுமே கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்த அவர், அதேபோல அசாம் மாநிலத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் இரண்டு பேர் மட்டும் முடிவு செய்தாக குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் கட்சி மக்களுக்கான கட்சி என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, பாஜகவால் பரப்பப்பட்டு வரும் வெறுப்பு வாதம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரிமோட் கண்ட்ரோல்
சாதி, மதம், மொழி என எவ்வித வேறுபாடும் இன்றி பொதுமக்களுடன் இணைந்து பயணிப்போம் என்றும் அசாமின் இளைஞர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் அவர் கூறினார். மேலும், "ரிமோட் கண்ட்ரோல் தொலைக்காட்சிக்கு நல்லதாக இருக்கலாம், ஆனால் அசாம் போன்ற ஒரு மாநிலத்தை ஆட்சி செய்ய அது உதவாது. தற்போதைய முதலமைச்சர் நாக்பூர் மற்றும் டெல்லியிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் உத்தரவுகளைப் பெறுகிறார் எடுக்கிறார். இதனாலேயே இந்த ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டும்" என்று கடுமையாகச் சாடி பேசினார்.