அகமதாபாத் கோர்ட்டில்... ஜாமீன் வாங்கிய கையோடு பாஜகவுக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி!
டெல்லி: மக்களிடம் கொள்கை ரீதியிலான போரை எடுத்துச் செல்ல உதவிய பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கும் நன்றி என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராகுல்காந்தி தினமும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது, அதன் முதல் 5 நாளில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில், செல்லாது என அறிவிக்கப்பட்ட உயர் மதிப்பு கொண்ட ரூ.750 கோடி மதிப்பிலான நோட்டுகளை மாற்றி, ஊழல் நடந்துள்ளது என ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தவறாக கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து அகமதாபாத் பெருநகர குற்றவியல் கோர்ட்டில் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக அவர் நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்துக்கு ராகுல் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர் எஸ் எஸ், பாஜகவில் உள்ள எனது அரசியல் எதிரிகள் தொடர்ந்து உள்ள மற்றொரு வழக்கில் ஆஜர் ஆவதற்காக நான் அகமதாபாத்தில் இருக்கிறேன்.
பொதுமக்களிடம் அவர்களுக்கு எதிரான கொள்கை ரீதியிலான போரை எடுத்துச் செல்ல இந்த களங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளதாக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிய ராகுல், வாய்மையே வெல்லும் என தெரிவித்தார்.
இந்த வழக்கில் ராகுலுக்கு அகமதாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.