ஏப்ரல் 2-ம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை… தாராள சலுகைகள் வெளியாக வாய்ப்பு
டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல்அறிக்கையை ஏப்ரல் 2ம் தேதி அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட உள்ளார்.
17-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வரும் ராகுல் காந்தி, வருகிற 2ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஊதியத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் இந்தியாவில் ஒவ்வொரு ஏழைகளின் வங்கிக் கணக்கிலும் மாதம் ரூ.6 ஆயிரம் பணம் செலுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதேபோல், மோடியின் கொள்கைகளால் 2018 ஆண்டில் மட்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, இளைஞர்கள் தொழில் தொடங்க அரசிடம் அனுமதி பெறும் முறை ஒழிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் தேசிய மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுபோன்று இன்னும் பல சலுகை அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.