உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு... அரசு உடனடியாக உதவ வேண்டும்... ராகுல் காந்தி ட்வீட்
டெல்லி: உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மாநில அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ரிஷி கங்கா நீர்மின் நிலையம் சேதமடைந்துள்ளது. மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்தோ திபத் போலீஸ் படை ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "தவுளிகங்கா ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மிகவும் கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு உடனடியாக உதவ வேண்டும். மீட்புப் பணிகளில் காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் நிற்பார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.