காங்கிரஸ் கட்சிக்குள் எழும் சலசலப்பு... தலைமை பொறுப்பை ஏற்கத்தயங்கும் ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய தலைவர் பதவியை ஏற்பதில் ராகுல்காந்திக்கு தயக்கம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல்காந்தி தயக்கம் காட்டி வருவதாகவும், கட்சியை அடுத்து வழிநடத்துவது யார் என்ற முரண்பட்ட கருத்துக்களால் ராகுல்காந்தி புதிய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவராக காந்தி குடும்பத்தைச் சேராத மன்மோகன் சிங் அல்லது ஏகே ஆண்டனி நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து ராகுல்காந்தியின் தாயார் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பரபரப்பான இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் கூடுகிறது.
காங்கிரசுக்கு களத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய முழுநேர தலைமை தேவை எனவும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்யுமாறும் 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு காரிய கமிட்டியை புதுப்பிக்குமாறும் அதில் அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்த கடிதத்தில் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மனிஷ் திவாரி, ராஜ் பப்பர், அரவிந்தர் சிங் லவ்லி, சந்தீப் தீட்சித், சசிதரூர் ஆகியோர் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
ராகுல்காந்திக்கு நெருக்கமான தலைவர்கள் சிலர் ராகுல்காந்தியை தலைவர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தற்சமயம் இடைக்கால தலைவரை நியமனம் செய்து விட்டு இந்த பரபரப்புகள் முடிந்த பின்னர் மீண்டும் 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் ராகுல்காந்தியை தலைவராக நியமனம் செய்திருக்கிறார் சோனியாகாந்தி.
சோனியா vs சீனியர்கள்.. அவசர அவசரமாக காரிய கமிட்டி கூட்டம்.. காங்கிரஸில் நடக்க போகும் அதிரடி!
தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் முரண்பட்ட கருத்துக்கள் ராகுல்காந்தியை சோர்வடையச் செய்துள்ளது. அவர் தலைவராக இருந்த கால கட்டங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடவில்லை. பல மாநில சட்டசபைத் தேர்தல்களில் தோல்வியே காங்கிரஸ் கட்சிக்கு பரிசாக கிடைத்தது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று ராகுல்காந்தியை பிரதமர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியினர் விரும்பினாலும் ராகுல்காந்திக்கு விருப்பமோ, நம்பிக்கையோ இருந்ததில்லை என்று அவரது பேட்டிகளே உணர்த்தியுள்ளன.
காங்கிரஸ் கட்சி கடந்த 2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரைக்கும் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த போதும் சோனியாகாந்திதான் தலைவராக இருந்தார். அப்போது எம்பியாக இருந்த ராகுல்காந்தி அமைச்சராக கூட பதவி வகிக்கவில்லை. 2014 ஆண்டு ஆட்சியை பறிகொடுத்து பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்கட்சி அந்தஸ்த்தில் கூட அமரமுடியவில்லை.
ஏதோ ஒரு வேகத்தில் அவரை தலைவராக நியமித்து அழகு பார்த்தார் சோனியாகாந்தி, அவரால் இந்த கூட்டத்தோடு போராடி ஜெயிக்க முடியவில்லை. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் குட்டி குட்டி சமாஸ்தானங்களாக செயல்படுகின்றனர். அவர்களை அரவணைத்து செல்வது என்பது இலேசுபட்ட காரியம் இல்லை. இந்திராகாந்தி போல ஒரு ராணுவக்கட்டுப்பாடு ராகுல்காந்தியிடம் இருந்ததில்லை எனவேதான் லோக்சபா தேர்தல் தோல்வியை அடுத்து எழுந்த விமர்சனத்திற்குப் பிறகு பதவி விலகினார் ராகுல்காந்தி.
சோனியாகாந்தி இடைக்கால தலைவராக ஓராண்டு காலம் பதவியில் இருந்து விட்டார். இனி பதவி விலகப்போவதாக அவர் கூறியதும் அரசல் புரசலாக தகவல் வெளியாகி சோனியா காந்தி பதவி விலகி விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவலுக்கு உடனே மறுப்பும் வெளியானது.
பிரியங்கா காந்திக்கு கட்சித்தலைவராக வேண்டும் என்ற ஆசையோ பிரதமராக வேண்டும் என்ற விருப்பமோ இருந்ததில்லை அதைப்பற்றி அவர் பலமுறை கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் சரிந்துள்ள காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை கட்டி எழுப்ப வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார்.
இப்போது உள்ள சூழ்நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசை எதிர்க்க வலிமையான தலைமை அமைந்தால் மட்டுமே எதிர்வரும் தேர்தலை வலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள். அதற்கு சரியான தலைமையை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பும் கட்சியினரிடம் உள்ளது. எனவே சலசலப்பை ஏற்படுத்தாமல் முரண்படாமல் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் மற்றும் கட்சித்தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும்.
எது எப்படியோ இன்று கூட உள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவாரா அல்லது சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பாரா? அல்லது காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்படுவார்களா என்று தெரிந்து விடும்.