ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது கடும் அப்செட்.. போன் அழைப்புகளுக்கு கூட பதில் சொல்லாத ராகுல் காந்தி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி தலைவர்களை சந்திக்க மறுப்பதோடு, தொலைபேசி அழைப்புகளையும் எடுப்பதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வரமுடியாத அளவுக்கு எண்ணிக்கையில் குறைந்து போனது.
ராகுல் காந்தி தலைமையில் அந்த கட்சி சந்தித்த முதல் லோக்சபா தேர்தலிலும் இதுபோன்ற மோசமான தோல்வியை சந்தித்ததால், தொண்டர்கள் மட்டுமின்றி, ராகுல் காந்தியுமே மிகவும் அப்செட்டாக உள்ளார்.
ஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.. இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு
ராஜினாமா முடிவு
தேர்தல் தோல்வி பற்றி விவாதிக்க, கடந்த சனிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், சோனியா காந்தி, மன்மோகன்சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அப்போது ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், இந்த முடிவை ஏற்க செயற்குழு மறுத்துவிட்டது.
வாரிசு அரசியல்
இந்த கூட்டத்தில், ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகிய மூத்த தலைவர்கள், கட்சியைவிட தங்கள் வாரிசுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தனர் என்று ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த பரபரப்பு அடங்காத நிலையில், நேற்று முதல் ராகுல் காந்தி, எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும் சந்திக்கவில்லை.
போனை எடுக்கவில்லை
காங்கிரஸ் தலைவர்கள் தொலைபேசியில் அழைத்தாலும், ராகுல் காந்தி போனை எடுக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் மீது அப்செட்டில் உள்ள ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற தயாராக இல்லை என்பதைத்தான் இந்த அறிகுறிகள் காட்டுவதாக, தெரிகிறது.
இன்று ஆலோசனை?
இதனிடையே, சனிக்கிழமை, ராஜஸ்தான் திரும்பிய அசோக் கெலாட், நேற்றே மீண்டும் டெல்லிக்கு விரைந்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ராஜஸ்தானில் காங்கிரஸ் பெற்ற படுதோல்வி பற்றி, மீண்டும் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராகுல் காந்திதான் இந்த கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் என்று தெரிகிறது.