இந்தியா துண்டாடப்படுகிறது.. டெல்லி கலவர பகுதிகளில் ஆய்வு செய்த ராகுல் காந்தி ஆவேசம்
டெல்லி: டெல்லியில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்று நேரில் ஆய்வு செய்தது.
இந்த குழுவில் மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மூத்த தலைவர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா உள்ளிட்டோர் இருந்தனர்.
டெல்லியில் நீடித்த மதக் கலவரத்தின் காரணமாக 47 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் முறையாக இந்த ஆய்வில் ஈடுபட்டார்.
ஆய்வுக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நமது எதிர்காலம் இங்கே எரிக்கப்பட்டு இருப்பதை பார்த்தேன். வெறுப்பும், வன்முறையும் நம்மை அழித்து விட்டது. இந்தியா துண்டாடப்பட்டு கொண்டு இருக்கிறது. இதனால் யாருக்கும் பலன் கிடைக்கப் போவது கிடையாது.
இந்திய அன்னையையும், இந்திய மக்களையும்தான் இது பாதிக்கப் போகிறது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sad to see what hatred does.
— Rahul Gandhi (@RahulGandhi) March 4, 2020
Love is strength.
Hate is weakness.
India cannot act with hatred. It’s not our way. #DelhiRiots pic.twitter.com/rMx3RSLv7u
கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 5 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தி வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இந்த குழுவில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
வன்முறை நடைபெற்ற போது ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால் அவர் வருகை தந்த பிறகு இந்த விசிட் செய்துள்ளார். முன்நதாக ட்விட்டரில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.