ராகுலை போலீசார் தள்ளியபோது... கண்டுகொள்ளாமல் நின்ற பாதுகாப்பு படையினர்!!
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கீழே தள்ளினர். அப்போது, அங்கு அவருடன் பாதுகாப்புக்கு சென்று இருந்த பாதுகாப்புப் படையினர் அமைதியாக வேடிக்கை பார்த்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்கு இன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். இந்த மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், செல்லக் கூடாது என்று அவர்கள் சென்ற வாகனங்களை போலீசார் வழி மறித்தனர்.
இதையடுத்து இருவரும் இறங்கி நடந்தே சென்றனர். உத்தரப் பிரதேசம் எல்லை கிரேடர் நொய்டா பகுதியில் போலீசார் ராகுலை வழிமறித்தபோது, அவரை கையால் தள்ளினர். அப்போது ராகுல் காந்தி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. இவர்களுடன் காங்கிரஸ் தொண்டர்கள் பெரிய அளவில் சென்று கொண்டு இருந்தனர். போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து அந்த இடத்தில் அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து யமுனா எக்ஸ்பிரஸில் சென்று கொண்டு இருந்த ராகுலை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, ''ஹத்ராஸ்க்கு நான் மட்டும் தனியாக செல்கிறேன் வழியை விடுங்கள். எந்த சட்டத்தின் கீழ் என்னை கைது செய்கிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த போலீசார், ''188 ஐபிசி சட்டத்தின் கீழ் கைது செய்கிறோம்'' என்று தெரிவித்தனர்.
ராகுல் காந்தியை போலீசார் பிடித்து கீழே தள்ளிபோது, அங்கு அவருடன் பாதுகாப்புக்கு சென்று இருந்த பாதுகாப்புப் படையினர் அமைதியாக இருந்தது ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்களும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியாங்கா காந்தி எந்த சட்டத்தின் கீழ் கைது?