கம்போடியா பறந்த ராகுல் காந்தி.. மன அமைதிக்காக தியானம் செய்ய முடிவு.. காங். தலைகள் அதிர்ச்சி!
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கம்போடியா சென்றுள்ளார்.
Recommended Video
டெல்லி: மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கம்போடியா சென்றுள்ளார்.
இந்தியா தற்போது அடுத்த தேர்தல் பரபரப்பிற்கு தயாராகி வருகிறது. மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் இந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மேலும் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்காக கட்சிகள் எல்லாம் தற்போது மிக தீவிரமாக தயாராகி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மிக தீவிரமாக தயாராகி வருகிறது.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி இன்னும் லோக்சபா தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வரவில்லை என்றுதான் கூற வேண்டும். இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரபூர்வ தலைவர் தேர்வாகவில்லை.
இப்போது என்ன
தற்போது காங்கிரஸ் கட்சி பொறுப்பு தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவரும் இன்னும் கட்சியை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை. தன்னுடைய விசுவாசிகளுக்கு மீண்டும் கட்சியில் பதவி வழங்கி வருகிறார்.
எப்படி விசுவாசிகள்
ஆம் காங்கிரஸ் கட்சியில் தற்போது மீண்டும் மூத்த உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ராகுல் காந்தி தலைவராக வந்த போது ஓரம்கட்டப்பட்ட மூத்த உறுப்பினர்கள் தற்போது மீண்டும் சோனியா மூலம் லைம் லைட்டிற்கு வந்துள்ளனர். பல மாநிலங்களில் இவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் என்ன
ஆனால் ராகுல் காந்தி மூலம் கட்சியில் பெரிய பொறுப்புகளை பெற்ற இளம் தலைவர்கள் பலர் ஓரம்கட்டப்பட்டு உள்ளனர். பல மாநிலங்களில் இளம் தலைவர்கள் அதிக நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் சிலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கதையும் நடந்தது.
ராகுல் என்ன
இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி கம்போடியா சென்று உள்ளார். தொடர் அரசியல் நிகழ்வுகள், கட்சியில் நடக்கும் மாற்றங்களால் அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்போது கம்போடியாவில் தியானம் செய்ய சென்று உள்ளார்.
என்ன தியானம்
அங்கு அவர் மன அமைதி தொடர்பான வகுப்புகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இன்னும் 10 நாட்கள் அவர் அங்கு இருப்பார். இந்த நிலையில் மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தலுக்கு முன் அவர் இந்தியா திரும்புவார். அதன்பின் அவர் தேர்தல் பிரச்சாரங்களை செய்வார். ஆனால் தீவிரமாக அதில் ஈடுபட மாட்டார்.
தீவிரம் இல்லை
தேர்தல் பிரச்சாரம் எதிலும் அவர் தீவிரமாக கலந்து கொள்ள மாட்டார். சோனியா காந்திதான் தேர்தல் திட்டங்களை வகுப்பார் என்று கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நேரத்தில் ராகுல் காந்திதான் நாடு முழுக்க தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.