தேர்தல் தோல்வி எதிரொலி... ராகுல் காந்தியின் 'பாரத் யாத்திரை' கை கொடுக்குமா?
டெல்லி: பாரத் யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் சென்று மக்களின் பிரச்சனைகளை அறிய ராகுல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பெற்று தனிபெரும்பான்மையாக ஆட்சி அமைத்தது. 52 இடங்களை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து, கட்சித் தலைவர் பதவியே ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததால், அந்த முடிவை ராகுல் காந்தி கைவிட்டதாக தகவல் வெளியானது.
நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநில தலைவர்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை . குறிப்பாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தங்களது மகன்களுக்கு சீட் வாங்குவதிலேயே குறியாக இருந்ததாகவும், அவர்கள் கட்சிக்காக சரியாக உழைக்கவில்லை என்றும் ராகுல் காந்தி ஆவேசப்பட்டதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதோடு பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்கட்சி பூசல் காரணமாக தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்ததாக கட்சி தலைமை கருதுகிறது. இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் முழு மனதோடு உழைக்காத மூத்த தலைவர்களை பதவியில் இருந்து நீக்கி விட்டு, அப்பதவிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தநிலையில், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு டெல்லி திரும்பி உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, பாரத் யாத்திரை' என்ற பெயரில் நாடு முழுவதும் சென்று மக்களின் பிரச்சனைகளை அறிய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் பாதயாத்திரை சென்று, மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, நடந்து முடிந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதே போல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், கிராம கூட்டங்கள் நடத்தி மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார். அதற்கு பலனாக, மக்களவைத் தேர்தலில் வெற்றி வாகை சூடியது திமுக. இந்தநிலையில், பாதயாத்திரை செல்ல ராகுல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.