அதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்ட நிர்மலா சீதாராமன்.. ராகுல் காந்தி கடும் தாக்கு
டெல்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தை அனில் அம்பானியிடம் கொடுத்தது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளதாகவும் கூறினார்.
ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம் இன்று லோக்சபாவில் நடந்தது. அப்போது அதன் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில் 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்களை மட்டும் அவசரமாக தருமாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என்றார். பின்னர் அவர் கூறியாதாவது:
126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்களே போதும் என விமானங்கள் குறித்த எண்ணிக்கையில் விமான படை மாற்றம் செய்ததா அல்லது விமான படையினரிடம் ஆலோசனை செய்யாமல் ஒரு தலைப்பட்சமாக விமான எண்ணிக்கையை மாற்றினீரா (பிரதமர்)
விளக்கம்
ஒரு ரபேல் விமானத்தை ரூ 526 கோடிக்கு வாங்க காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஒப்பந்தம் போடவிருந்தது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அப்படியிருக்கையில் பிரதமர் மோடி ஏன் அப்போதைய பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹோலாந்தை சந்தித்து புதிய ஒப்பந்தத்தை அமைத்தார். புதிய ஒப்பந்தத்தின்படி விமானத்தின் விலை ரூ.526 கோடியிலிருந்து ரூ. 16100 கோடியாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு ஏன் என்பதை மோடி விளக்க வேண்டும்.
அம்பானியிடம்
அப்போதைய அதிபர் ஹோலந்தே தனது அறிக்கையில் கூறியுள்ளதை போல், புதிய விலைக்கு ஒப்புக் கொண்ட போதும் எச்ஏஎல்லிடம் இருந்து ஒப்பந்தத்தை அம்பானியிடம் வழங்கியது ஏன்? புதிய விலையான ரூ. 16100 கோடிக்கு பாதுகாப்பு துறை அமைச்சகம் ஆட்சேபம் தெரிவிக்கவில்லையா
அளப்பறிய சாதனை
70 ஆண்டுகளாக எச்ஏஎல் நிறுவனம் விமானங்களை தயார் செய்து வருகிறது. நாட் விமானம் 1965-ஆம் ஆண்டு அந்த நிறுவனம் தயார் செய்த விமானம்தான் போரில் வெற்றி பெற காரணமாக இருந்தது. எஸ்யூ 30 விமானம் , மிராஜ் விமானம் , மிக் 27 விமானம் ஆகியவற்றை எச்ஏஎல் நிறுவனம்தான் தயார் செய்தன. அதனால் அந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது. எச்ஏஎல் நிறுவனம் இளைஞர்களுக்கு வேலைவைய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட நிறுவனம் எச்ஏஎல்தான்.
உங்கள் நண்பர்
அனில் அம்பானியோ எச்ஏஎல்லிடம் இருந்து பறித்து கொடுத்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் விமானங்களை தயார் செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். அனில் அம்பானிக்கு ஒப்பந்த்தை கொடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு உத்தரவிட்டதாக ஹோலந்தேவே கூறியுள்ளார். மோடி ஜி அவர்களே ரபேல் ஒப்பந்தத்தை ஏன் உங்கள் நண்பர் அனில் அம்பானியிடம் கொடுத்தீர்கள்? இந்த வழியில் ஏன் ஒப்பந்தத்தை எடுத்துச் சென்றீர்கள்.
தயக்கம் இல்லை
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்பிக்களுக்கு பின்னால் ஒளிந்துள்ளார். இதே அமைச்சர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது விலை என்பது பிரான்சின் அதிபர் மக்ரானுடன் ரகசியமாக பேரம் பேசப்பட்டது. ஆனால் மக்ரானின் கருத்தும் நிர்மலா சீதாராமனின் கருத்திலிருந்து வேறுபடுகிறது. பிரான்ஸ் அதிபர் மக்ரான் என்னிடமும், மன்மோகன் சிங்கிடமும் பேசுகையில் ரபேல் விமான விலை குறித்து இந்தியாவிடம் சொல்ல தனக்கு எந்த தயக்கமும் இல்லை என அவர் கூறியதை நான் ஏற்கெனவே இங்கே கூறிவிட்டேன். எனவே நண்பர்களே! ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன.
தைரியமில்லை
கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவுக்கு வந்து என்னுடைய பேச்சை கேட்டார். அவரும் நீண்ட நேரம் பேசினார். ஆனால் அவர் 5 நிமிடங்கள் கூட ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து பேச விரும்பவில்லை. இன்று கூட லோக்சபைக்கு வராமல் அவரது அறையில் ஒளிந்துள்ளார். இதன் மூலம் பிரதமருக்கு ரபேல் விமானங்கள் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ள தைரியமில்லை என்பது தெரியவருகிறது என்றார் ராகுல் காந்தி. பின்னர் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஆடியோ பதிவை போடலாமா என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.