மோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கு.. தீர்ப்பு ஒத்திவைப்பு!
பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
டெல்லி: பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடந்து முடிந்தது. இதில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று ரபேல் வழக்கில் மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இதனால் உச்ச நீதிமன்றம் மிகவும் பரபரப்பான கட்டத்தில் இருந்தது. இந்த விசாரணையுடன் சேர்த்து ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது தொடர்பான வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.
தற்போது தேர்தல் களத்தில் சவுக்கிதார் சோர் ஹே என்று வசனம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இதற்கு எதிராக பாஜக எம்.பி மீனாட்சி லேகி இந்த வழக்கு தொடுத்தார். ரபேல் ஊழல் குறித்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் இப்படி குறிப்பிட்டார். நீதிமன்றம் மோடியை ரபேல் திருடர் என்று குறிப்பிடாத போது, நீதிமன்றம் குறிப்பிட்டதாக ராகுல் காந்தி பேசுவது தவறு என்று வழக்கு தொடுக்கப்பட்டது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கே.எம் ஜோசப், சஞ்சன் கிசான் கவுல் ஆகியோர் அமர்வு இதை விசாரித்து வருகிறது. இதில் ராகுல் காந்தி தன்னுடைய விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே அளித்து இருந்தார். முதலில் வருத்தம் கேட்டவர் பின் இதற்கு மன்னிப்பு கேட்டார்.
கடைசியாக தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். எனது பேச்சில் உச்ச நீதிமன்றத்தை தவறாக எடுத்துக்காட்டி பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன், என்றார். இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது.
இதில் ராகுல் காந்தி தரப்பு, இந்த வழக்கில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் பாஜக தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
பாஜக தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, ராகுலின் மன்னிப்பை ஏற்க கூடாது. அவர் மக்கள் முன்னிலையில் மேடை போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ராகுலுக்கு சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை நிறைவு பெற்றது. இதில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.