மோடி செய்த 2 விஷயம்.. இரண்டிற்கும் ஒரே காரணம்.. ராகுலின் கலக்கல் டிவிட்டை பாருங்க!
ரபேல் ஊழலால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ரபேல் ஊழலால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விவகாரத்தை விடாப்பிடியாக பிடித்துள்ளார். ரபேல் ஊழல் குறித்து நாளுக்கு நாள் ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.
இந்த நிலையில் தனது டிவிட்டுகள் மூலம் இவர் பிரதமர் மோடியை நேரடியாக சீண்டி வருகிறார். இன்று அவர் மோடி குறித்து செய்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.
ஏற்கனவே குற்றச்சாட்டு
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை பிரதமர் மோடிதான் கட்டாய விடுப்பில் அனுப்பினார். அக்டோபர் 23ம் தேதி சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இடையே நிலவிய பிரச்சனையை அடுத்து இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல மோடி உத்தரவிட்டார். அதிகாலை 2 மணிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ரபேல்
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா, ரபேல் ஊழல் குறித்து விசாரிக்க மிகவும் தீவிரம் காட்டினார். அப்போது இதுகுறித்து அலோக் வெர்மா இரண்டு முறை ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்துதான் அலோக் வெர்மா விடுப்பில் அனுப்பப்பட்டார் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இந்த விசாரணையை தடுக்கவே மோடி இப்படி செய்தார் என்று கூறப்பட்டது.
மோடி சந்திக்கவில்லை
இந்த நிலையில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியின் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே சிக்ரி, பிரதமர் மோடி, காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ஆலோசனை செய்தனர். இதில் முறைப்படி சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி அவரை சந்திப்பதை தவிர்த்துவிட்டார்.
|
ராகுல் டிவிட்
தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் டிவிட் செய்துள்ளார். ராகுல் தனது டிவிட்டில் '' 1. பிரதமர் மோடி ஏன் அவசரமாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பினார்?
2. பிரதமர் மோடி தேர்வு கமிட்டியின் கூட்டத்தில் ஏன் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை அனுமதிக்கவில்லை, ஏன் அலோக் வெர்மாவை மோடி சந்திக்க மறுக்கிறார்?'' என்று கேள்வி எழுப்பிவிட்டு இரண்டிற்கும் பதில் ஒன்றுதான்.. ரபேல் என்று கூறியுள்ளார். ரபேல் குறித்த ராகுலின் இந்த புதிய அணுகுண்டு பெரிய வைரலாகி உள்ளது.