தாஜ்மஹாலை கூட மோடி விற்றுவிடுவார்... ராகுல்காந்தி ஆவேசம்
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை கூட பிரதமர் மோடி விட்டுவைக்க மாட்டார் என்றும், அதையும் ஒருநாள் அவர் விற்றுவிடுவார் எனவும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஜங்புரா பகுதியில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் கலந்துகொண்ட ராகுல் இதனைக் கூறினார். மேக் இன் இந்தியா என்ற முழக்கத்தை மட்டும் உருவாக்கிய மோடி, ஆக்ரா பகுதியில் ஒரு சிறிய தொழிற்சாலையை கூட நிறுவவில்லை, அதற்கான முயற்சிகளும் அவர் மேற்கொள்ளவில்லை என சாடினார்.
பிரதமர் மோடிக்கு மதம் குறித்து சரியான புரிதல் இல்லை என்றும், எந்த மதமும் வன்முறை பற்றி பேசவில்லை எனவும் ராகுல்காந்தி தெரிவித்தார். நாட்டில் வன்முறையை பரப்புவதே பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ள தலையாய பணி என ஆவேசம் காட்டினார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விவகாரத்தில் பிரதமர் மோடி மோசமான தோல்வியை தழுவியுள்ளதாகவும், இளைஞர்கள் சார்பில் அவர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை தாம் கேட்பதாகவும் ராகுல் கர்ஜித்தார்.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலட அனுமதி கோரி மத்திய அரசு வழக்கு.. நாளை தீர்ப்பு
இதனிடையே டெல்லி துவாரகாவில் நடைபெற்ற பிரச்சாரப் பேரணியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ராகுலுக்கு பதிலடி தரும் வகையில் சில கருத்தை பதிவு செய்தார். தேச விரோத குரல்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுப்படுத்தி வருவதாகவும், டெல்லிக்கு எப்போதும் வலுவான தலைமை தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தனது பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவாலையும் மோடி விட்டுவைக்கவில்லை. ஆம் ஆத்மி அரசு பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இன்னும் தேர்தலுக்கு 3 நாட்களே உள்ளதால் டெல்லியில் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளன. பாஜக, காங்கிரஸ், சார்பில் நட்சத்திரப் பேச்சாளர்களும் அவர்கள் பங்குக்கு ஒரு கலக்கு கலக்கி வருகின்றனர்.