நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து பேசாமல் பொம்மைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி.. ராகுல் விமர்சனம்
டெல்லி: நீட், ஜேஇஇ குறித்த பிரச்சினைகளை பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரோ பொம்மைகள் குறித்து பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் (இறுதியாண்டு தேர்வுகள் தவிர) என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வையும் நடத்தக் கூடாது என பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் தேசிய தேர்வுகள் முகமையோ வரும் செப்டம்ப்ர மாதம் 13-ஆம் தேதி நீட் தேர்வையும், செப்டம்பர் மாதம் 1 முதல் 6-ஆம் தேதி வரை ஜேஇஇ தேர்வையும் நடத்த அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.. ராஜபாளையம் நாய்கள்.. மன் கீ பாத்தில் தமிழகத்தை புகழ்ந்த பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகள்
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசோ எதிர்க்கட்சிகள் நீட் விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும் விருப்பம் இல்லாவிட்டால் எப்படி லட்சக்கணக்கான மாணவர்கள் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்திருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
நரேந்திர மோடி
இன்றைய தினம் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உரையில் நீட் தேர்வு குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதுகுறித்து பேசவில்லை. மாறாக இந்தியாவின் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்ளிட்ட நாய்களை வளர்க்க வேண்டும்.
தஞ்சை
தமிழகத்திலேயே பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் உள்ளது. விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்விக் கொள்கையில் ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது என்றார் மோடி.
ஹேஷ்டேக்
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஜேஇஇ, நீட் தேர்வு எழுதுபவர்கள் அந்த தேர்வுகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமரோ அதை விட்டுவிட்டு பொம்மைகள் குறித்து பேசியுள்ளார் என்று விமர்சித்த ராகுல் #Mann_Ki_Nahi_Students_Ki_Baat என்ற ஹேஷ்டேக்குடன் கருத்தை பதிவு செய்திருந்தார். அதாவது மாணவர்கள் குறித்து பேசாத மனதின் குரல் என்பது இதன் பொருளாகும்.