மிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு!
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தல் தோல்வியால் கட்சித் தலைவர் பதவியே வேண்டாம்.. ஓரமாக ஒதுங்கி நிற்கிறேன் என்பது பாரம்பரியமிக்க நேரு குடும்பத்தின் வாரிசு ராகுல் காந்திக்கு அழகு அல்ல.. அதுவும் வலதுசாரிகள் கை ஓங்கி நிற்கும் நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கமாட்டேன் என ராகுல் அடம் பிடிப்பது நேர்மையானதும் அல்ல என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ராகுல் காந்தி.
காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் கூட தமது முடிவை ராகுல் காந்தி திரும்பப் பெறுவதாக இல்லை. இதனால் காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
புதிய லோக்சபா
அதேநேரத்தில் 17-வது லோக்சபா புதிய யுத்த களமாக மாறியிருக்கிறது. லோக்சபாவின் முதல் நாளே எம்.பி.க்கள் பதவியேற்ற போது பாஜக எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீராம், வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே என கோஷங்கள் எழுப்பினர். இதற்கு பதிலடியாக தமிழக எம்.பிக்கள் தமிழிலேயே பதவி ஏற்றதுடன் தமிழ் வாழ்க, வெல்க திராவிடம் என முழங்கி பதிலடி கொடுத்தனர்.
பெரும்பான்மை அகம்பாவம்
மத்திய பாஜக அரசும் எடுத்த எடுப்பிலேயே மூர்க்கமாக புதிய கல்வி கொள்கை என்கிற பெயரில் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது; பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்கிறது; ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கிறது. இத்தனை அடாவடிகளையும் பெரும்பான்மை இருக்கிறது என்கிற அகம்பாவத்தில் பாஜக அரசு செய்து வருகிறது.
காங்கிரஸ் பலவீனம்
தற்போதைய நிலையில் பாஜகவுக்கு கடிவாளம் போட திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள்தான் உள்ளன. காங்கிரஸில் வலிமையான குரல் எதுவும் இல்லை. எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் பெறாவிட்டாலும் தேசம் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் போது தம்மை தேடி நெருக்கி வரும் பொறுப்பை ராகுல் காந்தி தட்டி கழித்துவிட்டு செல்போனில் மூழ்கி இருப்பது அபத்தமானது.
காங்கிரஸ் - பாஜக ஒப்பீடு
காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் பெரிய அளவில் கொள்கை வேறுபாடு எதுவும் கிடையாது. அதனால்தான் காங்கிரஸ் கட்சியே பல மாநிலங்களில் பாஜகவாக உருமாறியிருக்கிறது என்கிற கள யதார்த்தத்தை ராகுல் காந்திகூட உணரவில்லை. பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸைத்தான் சிறுபான்மை சமூகம் நம்புகிறது. பாஜகவை எதிர்க்கும் அத்தனை தேசிய இனங்களும் நம்புகிறது.
ராகுலின் வரலாற்று கடமை
ஆனால் பாஜக பாணியிலேயே மிதவாத இந்துத்துவா போக்கை காங்கிரஸும் ராகுல் காந்தியும் கடைபிடிப்பதில் எந்த பிரயோஜனுமும் இல்லை. கார்ப்பரேட் முகமாக அறியப்படும் தயாநிதி மாறனும் கூட கொள்கை முழக்கம் இந்த காலத்தில் ராகுல் காந்தி, தோல்விக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனம்தான்... அரிமாக்களாக முழங்கிய நேரு பரம்பரைக்கான அழகாக பாஜகவை எதிர்கொள்ள களத்துக்குப் போக வேண்டியதுதான் ராகுல் முன் உள்ள வரலாற்றுக் கடமை.