சர்வதேச யோகா தினத்தில் ராகுல் வெளியிட்ட ட்வீட்டால் கடும் சர்ச்சை
டெல்லி: ராணுவத்தின் மோப்ப நாய்களை முன்வைத்து 5-வது சர்வதேச யோகா தினத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டால் கடும் சர்ச்சை வெடித்துள்ளது.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மேலும் நாட்டின் முப்படை வீரர்களும் கடும் உறைபனிக்கு இடையேயும் யோகாசனங்களை செய்தனர். அதேபோல் பாதுகாப்புப் படையில் உள்ள மோப்ப நாய்களும் யோகாசனங்களை செய்தன.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. ராணுவத்தின் நாய்கள் யோகாசனங்கள் செய்யும் படங்களை முன்வைத்து 'நியூ இந்தியா' என கிண்டலுடன் ராகுல் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
பிரதமர் மோடியை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு ராகுல் காந்தி இந்த பதிவை வெளியிட்டிருந்தார். ராகுல் காந்தியின் இந்த ட்விட்டர் பதிவு கடும் சர்ச்சையையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சர்வதேச யோகா தினத்தை அவமதிக்கும் வகையிலும் பிரதமர் மோடியின் முழக்கத்தை விமர்சிக்கும் வகையில் ராகுலின் ட்வீட் பதிவு இருக்கிறது என்பது பாஜகவினரின் குற்றச்சாட்டு.
New India. pic.twitter.com/10yDJJVAHD
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2019
மேலும் தேசத்தின் பாதுகாப்பு படையை ராகுல் இழிவுபடுத்தியது ஏற்க முடியாதது என்ற கண்டனக் குரல்களும் வெடித்திருக்கின்றன. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றும் போது செல்போனில் ராகுல் விளையாடிக் கொண்டிருந்தார் என்பது புதிய சர்ச்சை.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் ராணுவத்தின் மோப்ப நாய்களை இழிவுபடுத்திவிட்டார் என்கிற புதிய பஞ்சாயத்து வெடித்துள்ளது.